Paristamil Navigation Paristamil advert login

காவிரி விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

காவிரி விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

4 ஆவணி 2026 செவ்வாய் 11:38 | பார்வைகள் : 421


காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் முறைப்படுத்தும் குழு உத்தரவுபடி கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் நீர் திறக்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரி நதிநீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமாரை, ஆக.3ம் தேதி பெங்களூருவில் சந்தித்து பேச, தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டு இருந்தார். இதற்காக, கர்நாடகா முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலும் பெறப்பட்டு இருந்தது.

சூழ்நிலை சரியில்லாததால், முதல்வர் விஜய் பெங்களூரு வருவதை தவிர்க்க வேண்டும் என, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார். இதையடுத்து, தமிழகத்திற்கு உரிய நீர் திறக்க, கர்நாடகாவிற்கு உத்தரவிட வலியுறுத்திஇன்று (ஆகஸ்ட் 03) சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: வினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாட்கள் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. கர்நாடக அணைகளில் மொத்தம் 77.537 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் கர்நாடகாவுக்கு எந்த சிரமமும் இருக்காது.

26.954 டி.எம்.சி நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு தந்திருக்க வேண்டும்; உரிய நேரத்தில் தமிழகத்திற்கு நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மேகதாது அணை விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அனுமதியோ , உத்தரவையோ பிறப்பிக்கக்கூடாது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். காவிரி குறுக்கே புதிய திட்டங்கள்,மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனுவை  தாக்கல் செய்துள்ளது.