Paristamil Navigation Paristamil advert login

Paris 19: கிராக் போதைக்கு எதிரான கடும் நடவடிக்கையில் நான்கு மாதங்களில் 309 கைது!!

Paris 19: கிராக் போதைக்கு எதிரான கடும் நடவடிக்கையில் நான்கு மாதங்களில் 309 கைது!!

5 ஆவணி 2026 புதன் 15:58 | பார்வைகள் : 1566


பரிசின் 19வது வட்டாரத்தில் உள்ள ரோசா-பார்க் (Rosa-Parks) பகுதியில் கிராக் (Crack) போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்த, 2026 ஏப்ரலில் சிறப்பு நீதித்துறை ஒருங்கிணைப்பு பிரிவு (COCJ) உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் நான்கு மாதங்களில் 421 காவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 309 பேர் கைது செய்யப்பட்டதுடன், 1,940  போதைப்பொருள் பயன்படுத்துவோர் மற்றும் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு, அதிகப்படியான காவல் ரோந்துகள் மற்றும் நீதிபதிகளின் நேரடி மேற்பார்வை இடம்பெற்றன. இதன் விளைவாக ரோசா-பார்க் RER நிலையம், Cesaria-Évora தெரு மற்றும் மக்டொனால்ட் புல்வெளிப் பாதை போன்ற பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தி, குடியிருப்போருக்கான தொந்தரவுகளை ஓரளவு குறைக்க முடிந்துள்ளது.

இருப்பினும், பிரச்சினை இன்னும் முழுமையாக தீரவில்லை. தினமும் பலர் அப்பகுதிக்கு போதைப்பொருள் பயன்படுத்த வருவதாக குடியிருப்போர் தெரிவிக்கின்றனர். செயிண்ட்-டெனி கால்வாய் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்துவோர் தொடர்ந்து கூடுவதால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நீண்டகால பிரச்சினையால் கடைகள் மூடப்பட்டுள்ளன, பாடசாலை மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது, டக்ஸிகள் அந்தப் பகுதிக்குச் செல்லத் தயங்குகின்றன, மேலும் சில நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களையும் மாற்றத் தொடங்கியுள்ளன. இதனை சமாளிக்க காவல்துறை, பரிஸ் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.