Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சூதாட்ட இணையதளங்களுக்கு தடை விதித்த அரசாங்கம்

இலங்கையில் சூதாட்ட இணையதளங்களுக்கு தடை விதித்த அரசாங்கம்

5 ஆவணி 2026 புதன் 19:38 | பார்வைகள் : 557


டிஜிட்டல் பொருளாதாரம் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கையில் உரிமங்களைப் பெறாமல் சட்டவிரோதமாக இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய சேவைகளை இயக்கி வரும் 24 இணையதளங்களுக்கான அணுகலை உடனடியாக நிறுத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணைக்குழு, 2025-ஆம் ஆண்டின் 17-ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டத்தின் விதிகள் மற்றும் அதிகாரங்களின்படி வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பின் அடிப்படையில் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையை எடுத்துள்ளது.

சட்டத்தின் 44-ஆம் பிரிவின்படி, சூதாட்ட ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டத்தின் 15, 16 மற்றும் 18-ஆம் பிரிவுகளின் கீழ் தேவையான செல்லுபடியாகும் உரிமங்களைப் பெறாமல் இலங்கையில் இணையவழி சூதாட்ட சேவைகளை இயக்குவதும் ஊக்குவிப்பதும் ஒரு குற்றமும் சட்டவிரோதச் செயலும் ஆகும்.

அதன்படி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கைக்குள் இருந்து சம்பந்தப்பட்ட சட்டவிரோத இணையதளங்களுக்கான அணுகலைத் தடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.