Paristamil Navigation Paristamil advert login

நிதி நெருக்கடி சீரான பின் வாக்குறுதிகள் நிறைவேற்றம்; நிதி அமைச்சர் அறிவிப்பு

நிதி நெருக்கடி சீரான பின் வாக்குறுதிகள் நிறைவேற்றம்; நிதி அமைச்சர் அறிவிப்பு

6 ஆவணி 2026 வியாழன் 14:26 | பார்வைகள் : 442


இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பேற்றுள்ள இந்த அரசு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும்,'' என, நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறினார்.

அவரது பட்ஜெட் உரை:

தமிழகத்தை வரும் 2036ம் ஆண்டிற்குள், 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த, அரசு உறுதி எடுத்துள்ளது. தமிழகத்தின் கடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இரு மடங்காக உயர்ந்து, 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதை, நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கை வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளோம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், சொந்த வரி வருவாய் விகிதம், வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை என, பல்வேறு நிதிநிலை குறியீடுகளில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பின்தங்கிய நிலையிலேயே தமிழகம் உள்ளது. மொத்த வரி வருவாயில் வட்டி செலுத்துவதற்கான தொகையும், பொறுப்பேற்றுக் கொண்ட செலவும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறைவாகவே உள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்ட இந்த அரசு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும். அதே வேளையில், மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசு பணிகளுக்கான டெண்டர்களில், நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இதனால், ஆரோக்கியமான போட்டி காரணமாக, அரசின் வீண் செலவு குறையும்.

இந்த முன்முயற்சியின் பலன்கள், அரசுக்கு கிடைக்க தொடங்கி விட்டன. நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கான முன்முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்பு கட்டணத்தை, அரசு சமீபத்தில் விதித்துள்ளது. இதன் வாயிலாக, ஆண்டிற்கு 1,000 கோடி ரூபாய் வரை வரவு எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி.,யில் நேரடி தொடர்பற்ற மதிப்பீடு, பதிவுத் துறையில் நேரடி தொடர்பற்ற பத்திரப்பதிவு, சுரங்க நடவடிக்கைகளை கண்காணிக்க முழுமையான கணினிமயமாக்கல் என, தகவல் தொழில்நுட்ப உதவியுடன் பல முன்னெடுப்புகளை, அரசு எடுத்து வருகிறது. இதன் வாயிலாக அரசிற்கு கூடுதலாக, 15,000 கோடி ரூபாய் வரை வருவாய் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.