Paristamil Navigation Paristamil advert login

இரட்டை முகம் காட்டும் ராகுல்: பாஜ சாடல்

இரட்டை முகம் காட்டும் ராகுல்: பாஜ சாடல்

7 ஆவணி 2026 வெள்ளி 11:01 | பார்வைகள் : 550


அலகாபாத் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்களுடன் கலந்துரையாடும் காங்கிரஸ் எம்பி ராகுல், ஜார்க்கண்டில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து மவுனம் காத்து இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறார் என பாஜ குற்றம்சாட்டி உள்ளது.

ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜூலை 25 ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா அரங்கத்தில் இந்தப் போராட்டம் நடந்து  வருகிறது. கனமழை பெய்த போதும் இந்தப் போராட்டம் நீடிக்கிறது.

டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா இயக்கத்தினர் நடத்திய போராட்டத்திற்கு ராகுல் ஆதரவு தெரிவித்தார்.  பார்லிமென்ட்டை நோக்கி நடத்திய பேரணியின் போது  அவர்களை தடுக்க முயன்ற போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.  போலீசார் தடியடி நடத்தினர்.

இது குறித்து இன்று வரை ராகுல் பேசி வருகிறார். ஆனால், காங்கிரஸ்  கூட்டணி வைத்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடக்கும் போராட்டம் குறித்து இதுவரை ராகுல் ஏதும் கூறவில்லை.

இது தொடர்பாக பாஜ எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:

உபி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் தடை செய்த நிறுவனத்திற்கு ஒட்டு மொத்த ஒப்பந்தத்தையும் ஜார்க்கண்ட் மாநில அரசு அளித்துள்ளது தெளிவாக தெரிகிறது.  அந்த நிறுவனம் தான் பல தேர்வுகளை நடத்துவதற்கு முழு பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது எதனை குறிக்கிறது?

அங்கு வேலை வாய்ப்புகள் விற்கப்படும் போது ராகுல் மவுனமாக இருப்பது ஏன்? அலகாபாத் மற்றும் சில இடங்களுக்கு சென்று இளைஞர்களுடன் ராகுல் பேசுகிறார். ஆனால், அவரது கட்சி ஆதரவுடன் ஆட்சி செய்யும் அரசு குறித்து மவுனம் காக்கிறார். ராகுல் பாசாங்குத்தனம் செய்கிறார். இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு இடத்தில் குரல் கொடுக்கிறார். மற்றொரு இடத்தில் மவுனம் காக்கிறார். இதனை ஒட்டு மொத்த நாடும் பார்த்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு ரவி சங்கர்  பிரசாத் கூறினார்

பாஜ இவ்வாறு கூறிய நிலையில் ராகுல் அது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல்,  மாணவர்கள் குரலுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு செவி சாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.