Paristamil Navigation Paristamil advert login

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது: கேரள அரசு

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது: கேரள அரசு

7 ஆவணி 2026 வெள்ளி 12:03 | பார்வைகள் : 431


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடிக்கு மேல் உயர்த்த, தமிழக அரசு முயற்சித்தால், அதை தடுக்க உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்' என கேரளா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை, தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இரு மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த அணையின் பராமரிப்பு உரிமை தமிழகத்திடமே உள்ளது. 131 ஆண்டுகள் பழமையான இந்த அணையில் 142 அடிக்கு மேல் நீரை தேக்கி வைக்க கேரளா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த பட்ஜெட் தாக்கலின் போது, 'விவசாயிகள் நலனுக்காக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு மேல் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த கேரள அரசு இது தொடர்பாக விவாதிக்க அவசர ஆலோசனை மேற்கொண்டது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் சதீசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்திற்கு பின், கேரள நீர்வளத் துறை அமைச்சர் மான்ஸ் ஜோசப்  கூறியதாவது:

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் எந்த சூழலிலும் 142 அடிக்கு மேல் உயர்த்தப்படாது. மேற்கொண்டு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரளா ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது. ஏனெனில் அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தவில்லை. மேலும், பேபி அணையை பலப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளோம். ஆனால், அந்த ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை.

உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 142 அடி வரம்பை தமிழகமோ, கேரளாவோ தனிச்சையாக மாற்ற முடியாது. அப்படி ஒரு முயற்சியை தமிழக அரசு எடுத்தால், கேரள மக்களின் நலன் கருதி, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்.

தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும். கேரள மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு புதிய அணை கட்டுவது தான் ஒரே வழி. இது தான் கேரளாவின் அடிப்படை கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.