Paristamil Navigation Paristamil advert login

தீவிரமடையும் கொங்கோவில் எபோலா பரவல் - உடனடி சர்வதேச நடவடிக்கை அவசியம்

தீவிரமடையும் கொங்கோவில் எபோலா பரவல்  - உடனடி சர்வதேச நடவடிக்கை அவசியம்

7 ஆவணி 2026 வெள்ளி 12:46 | பார்வைகள் : 406


கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றுநோய் தொடர்பில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், எபோலா பரவல் அறிவிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்துள்ள நிலையில், நிலைமை இதுவரை இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, ஓகஸ்ட் முதலாம் திகதி வரை 3,605 உறுதிப்படுத்தப்பட்ட எபோலா தொற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இது கொங்கோவில் இதுவரை பதிவான மிகப்பெரிய எபோலா பரவலாக மாறியுள்ளது. கடந்த 11 வாரங்களில் மட்டும் சுமார் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சந்தேகத்திற்கிடமான நோய்த்தொற்றுகள் தினசரி புதிய பகுதிகளில் பதிவாகி வருவதால், தற்போதைய மருத்துவ நடவடிக்கைகள் நோயின் பரவல் வேகத்தை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எபோலா நோயாளிகளை கண்டறிதல் மற்றும் தொடர்புடையவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவை இன்னும் போதுமானதாக இல்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

குறிப்பாக, புனியாவில் உள்ள எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எபோலா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 90 சதவீதம் பேர் முன்கூட்டியே கண்காணிக்கப்பட்ட தொடர்பாளர்கள் அல்ல என்றும், இதூரி மாகாணத்தில் மொத்த தொடர்பாளர்களில் 59 சதவீதம் மட்டுமே கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சமூகங்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு இல்லாமல் எபோலா பரவலை கட்டுப்படுத்த முடியாது என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சமூகங்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையினாலேயே புதிய தொற்றாளர்களை விரைவாக கண்டறிந்து, நோய் பரவலைத் தடுக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன், மலேரியா, அம்மை, கொலரா, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிற நோய்களும் தொடர்ந்தும் மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

எனவே, எபோலா சிகிச்சையுடன் இணைந்து அத்தியாவசிய சுகாதார சேவைகளும் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.