Paristamil Navigation Paristamil advert login

இலங்கை சிறைச்சாலைகளில் பதற்றம் - நீதி அமைச்சரின் விசேட உரை

இலங்கை சிறைச்சாலைகளில் பதற்றம் - நீதி அமைச்சரின் விசேட உரை

7 ஆவணி 2026 வெள்ளி 17:44 | பார்வைகள் : 585


போதைப்பொருள் குற்றங்களுக்கு மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணை பெறுவதற்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பல சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருளின் நிகர எடை 10 கிராமிற்கு மேல் அதிகமாக இருக்கும் பட்சத்தில், மேல்முறையீட்டு நீதிமன்றம் மூலம் பிணை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு செய்தியைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. கடந்த ஒரு வருடமாகச் சிறைச்சாலை நிலைமைகளைக் அவதானித்ததில், அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால் பிணை பெற முடிவதில்லை என்பதே கைதிகளின் முதன்மை குற்றச்சாட்டாக இருந்தது.

இதனைக் கண்டறிந்து கடந்த ஆண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 118 வெற்றிடங்கள் இருந்ததால் அறிக்கைகள் விரைவாகக் கிடைக்கவில்லை. தற்போது அந்த அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்குத் தேவையான சுமார் 70 பணியாளர்களைப் புதிதாகப் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய இயந்திரங்களும் கொண்டுவரப்படவுள்ளன. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 7,500 முதல் 9,000 வரையிலான அறிக்கைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் எடை 10 கிராமிற்கு மேல் இருந்தால் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டி இருப்பதால் பிணை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கைதிகளின் உறவினர்கள் குறிப்பிட்டனர். இந்தச் சட்டத்தைச் திருத்துவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, சில போதைப்பொருள் குற்றங்களுக்கு மேல் நீதிமன்றம் மூலமாகவே பிணை பெறும் வாய்ப்பு மீண்டும் ஏற்படுத்தப்படும்.

தற்போதைய சூழலில், சில சூழ்ச்சிக்காரர்கள் சிறையிலுள்ளவர்களைத் தூண்டிவிட்டுச் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றனர். உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும், எனவே பொறுமையுடன் செயல்படுங்கள். சிறைச்சாலையில் போதிய வசதிகள் இன்மையால் அதிக நெருக்கடி நிலவுகிறது. அந்த வசதிகளை வழங்கவும் நெருக்கடியைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் வசதிகளை அதிகரிக்கவும் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழியுங்கள். சிறைக்குள் கலவரத்தில் ஈடுபட்டு உங்களின் வளங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். விரைவில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பிணை பெறும் வசதி செய்து தரப்படும்."