Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

இலங்கையில் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

17 மாசி 2025 திங்கள் 16:45 | பார்வைகள் : 12867


உள்ளூராட்சி மன்றத்  தேர்தலுக்காக  ஏற்றுக்கொண்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிதாகவே வேட்புமனுக்கள் கோரப்படும்.  ஆரம்பத்தில் பெற்றுக் கொண்ட கட்டுப்பணத்தை மீள செலுத்துவதற்கு நிதியமைச்சும், தேர்தல்கள் ஆணைக்குழுவும்  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும். அச்சமடையாது  தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும் என்று  சபைமுதல்வரும், அமைச்சருமான  பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற  உள்ளூராட்சி அதிகாரசபைகள் ( விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளில் பிரதிபலனாகவே இந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

அவர்தான் கடந்த ஆண்டு பாராளுமன்றத்துக்கு வந்து ' உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடவில்லை,  தேர்தலுமில்லை'  என்று குறிப்பிட்டு மக்களையும், பாராளுமன்றத்தையும் அவமானப்படுத்தினார்.

2022 ஆம் ஆண்டு  மக்களால் அப்போதைய ஆட்சியாளர் விரட்டியடிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து புண்ணியத்துடன் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டார்.ரணில் - ராஜபக்ஷர்கள் செய்த தவறின் பெறுபேற்றையே முழு நாடும் எதிர்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை  நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு   முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முயற்சிகளுக்கு ஒருசில அரச அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

இதற்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தோம். தேர்தலை பிற்போட்டதால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, தேர்தலை விரைவாக நடத்துமாறு தேர்தல்கள்  ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக் கொண்ட வேட்புமனுக்களுக்கு அமைய தேர்தலை நடத்த முடியாது.வேட்புமனுத்தாக்கல் செய்தவர்கள் தற்போது அந்த கட்சியில் இல்லை. 

ஒருசில வேட்பாளர்கள் அரசியலில் இருந்து விலகியுள்ளார்கள். ஒருசில வேட்பாளர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்கள். 

எமது கட்சியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களில் 100 பேர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்கள். 

இந்த காரணிகளை அடிப்படையாகக் கொண்டு  ஏற்றுக்கொண்ட வேட்புமனுத்தாக்கலுக்கு அமைய தேர்தலை நடத்த முடியாது என்பதை அனைத்து அரசியல் கட்சித்  தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ( விசேட ஏற்பாடுகள் ) சட்டமூலம் தொர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கு அமைவாகவே செயற்படுவோம்.  

நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட போவதில்லை. தேர்தலுக்கு உரிய காலவகாசம் வழங்கப்படும்.   எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும்.  

ஏற்றுக்கொண்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிதாகவே வேட்புமனுக்கள் கோரப்படும். ஆகவே ஆரம்பத்தில் பெற்றுக் கொண்ட கட்டுப்பணத்தை மீள செலுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நிதியமைச்சும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்  தாமதமின்றி நடத்தப்படும். அரச அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்த போவதில்லை என்பதற்கு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் சிறந்த எடுத்துக்காட்டு ஆகவே. எதிர்க்கட்சிகள் அச்சமடையாது  தேர்தலுக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3