செம்மணி மனித புதைகுழி - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை
4 புரட்டாசி 2025 வியாழன் 14:34 | பார்வைகள் : 4376
இலங்கை வரலாற்றில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான மிக முக்கிய விசாரணைகளில் ஒன்றாகக் கருதப்படும் 200-இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த வலுவான உண்மையை கண்டறியும் விசாரணைகளின் அடிப்படையில் அறிக்கை வௌியிட்டுள்ளது.
யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப் புதைகுழி நாளாந்தம் இறந்த காலத்தின் சாட்சியமாக மாறி வருகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 42ஆவது நாட்களை கடந்துள்ளது.
இன்று வரை 231 மனித மனித எச்சங்களும் பல்வேறு சான்றுப் பொருட்களும் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் உண்மை நிலைமையக் கண்டறியும் நோக்கில் ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்த விசாரணைகளின் அடிப்படையில் அது தொடர்பான அறிக்கையை வௌியிட்டுள்ளது.
இந்த அறிக்கை, தடயவியல் நிபுணத்துவம், தொழில்நுட்ப வளங்கள் மற்றும் நிறுவன பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் போதுமான தன்மை தொடர்பான தமது ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தி நிற்கின்றது.
செம்மணி மனிதப் புதைகுழியில் பணியாற்றி வரும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் முதற்கட்ட கருத்துகளின் அடிப்படையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவை எந்தவகையான ஆடைகளையும் கொண்டிருக்கவில்லை என்பதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.
மேலும் எலும்புக்கூடுகளின் நிலை, சில எச்சங்கள் ஒன்றுக்கொன்று அருகாமையில் இருப்பது மற்றும் எச்சங்களின் ஆழம் குறைவாக இருப்பது ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு புதைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கொலைகள் இடம்பெற்றுள்ளமைக்கான நியாயமான வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படுதல் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் கடுமையான குற்றங்களை விசாரித்து வழக்குகளைத் தொடர நிரந்தர சுயாதீன அலுவலகத்தை ஸ்தாபிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் மரபணுக்களுடன், எச்சங்களின் மரபணுக்களை ஒப்பிட்டுப் பார்க்க DNA வங்கியை ஸ்தாபிக்கவும் எச்சங்களின் வயதைத் துல்லியமாகக் கணிப்பிட காபன் 14 பரிசோதனைகளை (bomb-pulse carbon dating ) முன்னெடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கிய 17 பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
பாரியளவிலான மனிதப் புதைகுழி விசாரணைகளுக்கு நீதி அமைச்சு முறையான செயற்பாட்டு நடைமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய தடயவியல் உபகரணங்களை விடுவிக்கும் செயற்பாடுகளை நிதியமைச்சும் துரிதப்படுத்த வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire