Paristamil Navigation Paristamil advert login

கிளிநொச்சயில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் - பெண்கள் உட்பட பலர் கைது

கிளிநொச்சயில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் - பெண்கள் உட்பட பலர் கைது

3 கார்த்திகை 2025 திங்கள் 15:28 | பார்வைகள் : 2308


சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குழுவினரை கைது செய்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 16 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களும், 26 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண் சந்தேகநபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.