Paristamil Navigation Paristamil advert login

2024 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு 41.33 சதவீத ஓட்டு!

2024 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு 41.33 சதவீத ஓட்டு!

11 மார்கழி 2025 வியாழன் 09:16 | பார்வைகள் : 1721


கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து வாங்கிய ஓட்டுகள் 41.33 சதவீதம். இதை வைத்து பார்க்கும் போது, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி,'' என, கட்சி பொதுக் குழுவில் நேற்று நிர்வாகிகளுக்கு உற்சாகம் தரும் வகையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், தற்காலிக அவைத் தலைவர் முனுசாமி தலைமையில் நேற்று சென்னை வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில், பழனிசாமி பேசியதாவது:

கூட்டத்திற்கு வந்திருக்கும் அனைவரும், பல்வேறு தேர்தல்களில் களம் கண்ட அனுபவமும், திறமையும் பெற்றவர்கள்; எப்படி ஓட்டுகள் சேகரிக்க வேண்டும் என்ற அரசியல் பாடத்தை கற்றவர்கள்.

இந்த திறமையை, வரும் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தினால், அ.தி.மு.க., ஆட்சி மலரும். இதை, எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற்றதால், சட்டசபை தேர்தலில் எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என ஸ்டாலின் கூறுகிறார். அது தவறு; தமிழக மக்கள், லோக்சபா தேர்தலில் ஒரு மாதிரியும், சட்டசபை தேர்தலில் ஒரு மாதிரியும் ஓட்டளிப்பர்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், அப்போது, 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், ஒன்பது தொகுதிகளில் அ.தி.மு.க., வென்றது.

லோக்சபா தேர்தலில், நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில், தி.மு.க., - எம்.பி., அதிக ஓட்டுகளை பெற்றார். ஆனால், சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வென்றது. அடுத்து, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 75 இடங்களை பிடித்தது.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் சேர்ந்து வாங்கிய ஓட்டுகள் 41.33 சதவீதம். அந்த தேர்தலில், 84 சட்டசபை தொகுதிகளில், தி.மு.க.,வை விட அதிக ஓட்டுகள் பெற்றுள்ளோம்.

மேலும், 15 தொகுதி களில், தி.மு.க.,வை விட 1 சதவீதம் குறைவாகவும், 18 தொகுதிகளில் 1 முதல் 2 சதவீதம் குறைவாகவும் பெற் றுள்ளோம். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் வென்ற அ.தி. மு.க., கூட்டணி, 2021 சட்டசபை தேர்தலில், 75 தொகுதிகளில் வென்றது.

எனவே, 2024ல், 84 தொகுதிகளில் முதலிடம் பெற்ற அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி,வரும் சட்டசபை தேர்தலில், 210 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், அம்மா இருசக்கர வாகன திட்டம் போன்றவற்றை நிறுத்தி விட்டனர். அ.தி.மு.க., கொடுத்த நெருக்கடியால் தான், 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை தி.மு.க., அரசு வழங்கி வருகிறது.

வரும் தேர்தலுக்காக தி.மு.க., அரசு எவ்வளவு பணம் கொடுத்தாலும், மக்கள் வாங்கிக் கொள்வர்; ஆனால், அ.தி.மு.க.,வுக்கு தான் ஓட்டு போடுவர். முதல்வர் ஸ்டாலின், மக்களிடமும், மாணவர்களிடமும் செல்வாக்கை இழந்து விட்டார். தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால், அவசர அவசரமாக 'லேப்டாப்' கொடுப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

எச்சரிக்கை


தி.மு.க., ஆட்சியில், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் குறித்து, அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், முதலாவதாக ஒருவர் சிறை செல்லப் போகிறார். சட்டசபை தேர்தலுக்கு முன், அடுத்த 100 நாட்களில், தி.மு.க., அமைச்சர்கள் பத்திரமான இடத்துக்கு போவர்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், பெரியசாமி, தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், சக்கரபாணி, சிவசங்கர் என பலர் ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எல்லாம், தேர்தல் நேரத்தில் எங்கே இருப்பர் என்று தெரியவில்லை; வெளியில் இருப்பது சந்தேகம். ஏனெனில் நடவடிக்கை துவங்கி விட்டது.

பத்திரமாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பர். தி.மு.க., ஆட்சியின் ஊழல்கள், அ.தி.மு.க., ஆட்சியில் தோண்டி எடுக்கப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். கள்ள ஓட்டில் வெற்றி பெற்றதால் தான், எஸ்.ஐ.ஆர்., என்றாலே முதல்வர் ஸ்டாலின் அலறுகிறார்.

வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். அ.தி.மு.க., சொந்த பலம் வாய்ந்த கட்சி. ஆனால், தி.மு.க., மக்கள் பலம் இழந்த கட்சி. அதனால் தான் கூட்டணியை நம்பி தி.மு.க., உள்ளது. வழக்கமாக எல்லா தேர்தலிலும், தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்னர் தான், கூட்டணி அமைப்போம். அதேபோல இப்போதும் அமைக்கப்படும். பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க., வென்று, தனித்து ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு பழனிசாமி பேசினார்.
 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்