Paristamil Navigation Paristamil advert login

வருமானம் குறைவு... செலவு அதிகம் என்பதே தமிழகத்தின் நிலை! முதல்வர் ஸ்டாலின்

வருமானம் குறைவு... செலவு அதிகம் என்பதே தமிழகத்தின் நிலை! முதல்வர் ஸ்டாலின்

9 மாசி 2026 திங்கள் 11:48 | பார்வைகள் : 2011


வருமானம் குறைவு, செலவு அதிகம் இதுதான் நமது நிலை என்று ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை (புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக) முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் நன்றி அறிவிப்பு மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

நன்றி சொல்லி நமக்கான உறவை தூரமாக்கி விடாதீர்கள். உங்களின் வியர்வைத்துளிகள் மதிக்கப்பட வேண்டும். கண்ணீர்துளிகள் துடைக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் உங்களின் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சி பொறுப்புக்கு வரக்கூடிய நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்கு பணியாற்றுகின்ற நீங்களும் சேர்ந்து தான் அரசாங்கம். நமது திராவிட மாடல் அரசானது, அரசு ஊழியர்களின் அரசாக இருக்கிறது. இது தமிழகத்தில் கருணாநிதி வகுத்து தந்த பாதை.

அரசு அலுவலர்கள் நடத்தை பற்றிய ரகசிய குறிப்பேடு நீக்கம், இந்தியாவிலேயே அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி, பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர்கள் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி, ஈட்டிய விடுப்பை சமர்ப்பித்து பணமாக பெறும் திட்டம் அமல், திருமண கடன், வாகன கடன், வீடு கட்ட கடன், மருத்துவக்காப்பீட்டுத் திட்டம், பஞ்சப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகை போனசாக வழங்குதல், கலந்தாய்வின் மூலம் பணிமாறுதல், அரசு பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்வு, 10,000 சாலைப் பணியாளர்கள் நியமனம், 7000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம், பண்டிகை முன்பணத்திற்கு வட்டி நீக்கம், 2 லட்சம் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வுக்கால பணிக்கொடை உச்சவரம்பு உயர்வு என நன்மைகளையே செய்த ஆட்சிதான் கருணாநிதியின் ஆட்சி.

ஆசிரியர்கள் செய்வதை பணி என்று நான் சொல்லமாட்டேன், நீங்கள் செய்வது தொண்டு. உங்களினால் தான் பள்ளிக்கல்வியில் நாட்டிலே 2வது சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிக் கொண்டு இருக்கிறது. திராவிட மாடல் அரசு, நாட்டுக்கு முத்திரையான முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இந்த திட்டங்களினால் திராவிட மாடல் அரசுக்கு நற்பெயர் கிடைத்திருக்கிறது என்றால் அதன் பெரும்பங்கு அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நமக்கான வரிப்பகிர்வை மத்திய அரசு குறைத்துக் கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியைக்கூட குறைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஜிஎஸ்டி மாற்றங்களினால் மாநிலத்தின் வருவாய் குறைந்து கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் எல்லா துறைகளிலும் நலத்திட்டங்களை செய்தாக வேண்டும். வருமானம் குறைவு, செலவு அதிகம் இதுதான் நமது நிலை. திட்டமிட்டு, செயற்கையாக இந்த நிதி நெருக்கடியை உருவாக்குகின்றனர்.

அரசியல்ரீதியாக மட்டுமல்லாமல், நிர்வாக ரீதியாகவும் அவர்களை(மத்திய அரசை சொல்கிறார்) சமாளித்து தான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.  பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கையை நீங்கள் 22 ஆண்டு காலமாக வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஆனால் யார் ஆட்சியில் இந்த உரிமை பறிக்கப்பட்டது? அதிமுக ஆட்சியில்... அப்போது நீங்கள் நடத்திய போராட்டம் சாதாரணமானதா? உங்களுக்கு ரத்தக்கண்ணீர் வரவழைத்த ஆட்சி தான் அதிமுக ஆட்சி. ஆனால் இப்போது இருப்பது அனைவரையும் அரவணைக்கக்கூடிய கருணையான திமுக ஆட்சி.

இப்போது தமிழக அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச் சூழலிலும், அரசு ஊழியர்களின் அத்தனை நலன்களை காக்கும் வகையில் அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்கும் என்று நான் இங்கு உறுதி அளிக்கிறேன்.

அதிமுக ஆட்சியில் இபிஎஸ் முதல்வராக இருந்த போது அரசு ஊழியர்களை எப்படி கொச்சைப்படுத்தி பேசினார், எப்படி எல்லாம் விளம்பரம் கொடுத்தனர் என்று நான் அதிகம் நினைவூட்ட வேண்டியதில்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு ஒரு எதிரான கூட்டணியை அமைத்துவிட்டு, அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஆதரவாக இருப்பார்களா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள். உங்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3