Paristamil Navigation Paristamil advert login

கருத்துக்களை எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள் தி.மு.க.,வினர்; சீமான்

கருத்துக்களை எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள் தி.மு.க.,வினர்; சீமான்

25 சித்திரை 2026 சனி 09:59 | பார்வைகள் : 2127


கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள்' என, தி.மு.க.,வினரை நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதி நா.த.க., வேட்பாளர் அனிஸ் பாத்திமா மீது, கர்ப்பிணி  என்றும் பாராமல் கொடும் தாக்குதலை, தி.மு.க.,வினர் நடத்தியுள்ளனர். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி பாத்திமா காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு, தி.மு.க., முரடர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதனால், தேர்தல் நாளில், அனிஸ் பாத்திமா மீது கடுமையாக தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானது. தற்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது; தி.மு.க.,வா அல்லது தேர்தல் கமிஷனா?

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு, தேர்தல் கமிஷன் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?கொடும் தாக்குதல் நடத்திய தி.மு.க., முரடர்கள் மீது, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், நா.த.க., சார்பில், மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.