Paristamil Navigation Paristamil advert login

மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் ஹண்டாவைரஸ் - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவும் ஹண்டாவைரஸ் - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

8 வைகாசி 2026 வெள்ளி 07:04 | பார்வைகள் : 1950


அத்திலாந்திக் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா கப்பல் ஒன்றில் ஏற்பட்ட ஹண்டாவைரஸ் பரவல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் கடும் அச்சத்தை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, இந்த வைரஸ் மிக அரிதான வகையில் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவியிருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நெதர்லாந்தைச் சேர்ந்த “எம்.வி. ஹொண்டியஸ்” என்ற சுற்றுலா கப்பலில் சுமார் 150 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர்.

பொது சுகாதார அச்சுறுத்தல் காரணமாக கேப் வெர்டே தீவுகள் கப்பலை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க மறுத்ததால், கப்பல் அத்திலாண்டிக் பெருங்கடலில் உதவிக்காக காத்திருந்தது.

ஸ்பெயின் அரசு செவ்வாய்க்கிழமை கப்பலை கேனரி தீவுகளுக்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

அங்கு பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீது விரிவான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், கப்பலில் முழுமையான கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளன.

“கப்பலில் ஒரே அறையில் தங்கியவர்கள் அல்லது கணவன்-மனைவி போன்ற நெருங்கிய தொடர்புகளுக்கு இடையில் மனிதரிடமிருந்து மனிதருக்கு வைரஸ் பரவியிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.

ஹண்டாவைரஸ் பொதுவாக எலிகள் மற்றும் அவற்றின் சிறுநீர், உமிழ்நீர் அல்லது கழிவுகள் மூலம் பரவுவது வழக்கம். ஆனால் “ஆண்டெஸ்” (Andes) வகை ஹண்டாவைரஸ் மனிதர்களுக்கிடையே பரவக்கூடிய தன்மை கொண்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். 70 வயதுடைய நெதர்லாந்து நபர் ஒருவர் ஏப்ரல் 11 அன்று கப்பலிலேயே உயிரிழந்தார்.

அவரது 69 வயதான மனைவி ஜோகன்னஸ்பேர்க் நோக்கி பயணித்த விமானத்தில் ஏப்ரல் 26 அன்று உயிரிழந்தார்.

ஜெர்மனியைச் சேர்ந்த மூன்றாவது பயணி ஒருவர் மே 2 அன்று மரணமடைந்தார்.

மேலும் நான்கு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 56 வயதான பிரிட்டிஷ் குடிமகன் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கப்பலில் இருந்து மூவர் தற்போது மருத்துவ தேவைக்காக அவசர வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 56 வயதான பிரிட்டிஷ் நபர், 41 வயதான டச்சு குடிமகன், 65 வயதான ஜெர்மன் நபர் அடங்குவர்.

அவர்கள் இரண்டு தனி விமானங்கள் மூலம் ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள விசேட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவுள்ளனர்.

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3