தி.மு.க., ஆதரவுடன் அ.தி.மு.க., ஆட்சி கனிமொழி எதிர்ப்பால் கைவிடப்பட்டது
9 வைகாசி 2026 சனி 11:16 | பார்வைகள் : 2131
தி.மு.க., ஆதரவுடன், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்ற பேச்சு வெறும் வதந்தி,'' என, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி கூறினார்.
தி.மு.க.,வின் தயவோடு அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் திட்டத்திற்கு கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடந்த தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அவர் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
தி.மு.க., மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள், அ.தி.மு.க., ஆட்சி அமைக்க, தி.மு.க., ஆதரவு அளிப்பதை விரும்பவில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதற்கு, தி.மு.க., ஆதரவு அளிக்கும் முடிவுக்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை; எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்ததாக தெரிகிறது.
ஆனால், தன் தந்தை ஸ்டாலினை கொளத்துாரில் தோற்கடித்ததால், த.வெ.க., தலைவர் விஜய் முதல்வராகக் கூடாது. என்ன விலை கொடுத்தாலும் சரி, அ.தி.மு.க., ஆட்சி அமைக்க, தி.மு.க., ஆதரவு தர வேண்டும் என்பதில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களை அழைத்து பேசி, அவர்களிடம் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் கருத்தையும் ஏற்க வைத்துள்ளார். கட்சியின் மூத்த முன்னோடிகள், நிர்வாகிகளை மூளை சலவை செய்யும் பணிகளிலும் உதயநிதி ஈடுபட்டிருந்தார்.
ஆனால், கனிமொழி மட்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க, தி.மு.க., ஆதரவு தரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
தேர்தலை ஒட்டி, எட்டு மண்டலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதில், தென்மண்டலத்தில் கனிமொழி பொறுப்பாளராக பணியாற்றிய, 13 தொகுதிகளில், 59 சதவீத ஓட்டுகளை பெற்று, முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
அதனால், சமீபத்தில் உதயநிதியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்ய நடந்த, உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தையும் கனிமொழி புறக்கணித்தார்.
மேலும், தமிழகம் முழுதும் உள்ள கட்சி நிர்வாகிகளும், தி.மு.க., தொண்டர்களும் கனிமொழியை தொடர்பு கொண்டு, அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவு தரும் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் கனிமொழி, 'பொறுமையாக இருங்கள்; கட்சி நலன் கருதி ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார்' என்று, கூறியிருக்கிறார்.
இந்நிலையில், ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு கனிமொழி அளித்த பேட்டி:
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. கவர்னரே தேவையில்லை என்பது தான், தி.மு.க.,வின் நிலைப்பாடு. அதோடு, தி.மு.க., ஆதரவில் -அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக வெளியாகும் செய்தி வெறும் வதந்தி. ஊகங்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது.
தேர்தலில் மக்கள் தெளிவான தீர்ப்பை அளிக்காவிட்டாலும், மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க, கவர்னர் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire