டிஜிட்டல் மயமாகும் ரேஷன் வினியோகம்; ரூ.25,630 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 வைகாசி 2026 வியாழன் 10:32 | பார்வைகள் : 1166
நாடு முழுதும், ரேஷன் பொருட்கள் வினியோக திட்டத்தை முற்றிலும், 'டிஜிட்டல்' மயமாக்கி, அதன் வினியோக திறனை மேம்படுத்தும் நோக்கில், 'சார்தக் பி.டி.எஸ்.,' முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு, 25,630 கோடி ரூபாய் நிதி ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் ரேஷன் பொருட்கள் வினியோகத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 16வது நிதிக்குழுவின் பதவிக் காலத்திற்குள் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்காக மத்திய அரசின் பங்காக 25,630 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
ஒட்டுமொத்த ரேஷன் வினியோக முறையிலும் கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்தம் நடக்கவுள்ளது. அதாவது, தற்போதைய ரேஷன் பொருட்கள் வினியோக முறையில் எந்த மாற்றமும் இருக்காது.
ஆனால், ரேஷன் பொருட்களுக்கான போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் பொருட்களை கையாளுதல் ஆகியவை நவீனப்படுத்தப்படும். அதன் செயல்திறன் மேம்படும். அதற்கான ஒரு சீர்திருத்தமாகவே இந்த நடவடிக்கை அமையும்.
இதன் மூலம் மாநில அரசுகள் தங்கள் உணவு வினியோக ஏற்பாடுகளை மிக துல்லியமாகவும், அதிக திறனுடனும் கையாள முடியும். திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் பங்களிப்பை அதிகரிப்பதற்காக இந்த திட்டம் மூன்று முக்கிய துாண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலாவது, 'நிர்மல்'. இது ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் நிகழ்நேர ரேஷன் பயனாளர்கள் பதிவேடு. மத்திய துறைகளுடன் இது நேரடியாக இணைக்கப்படுவதால், நலத்திட்ட உதவிகள் தகுதியானவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்யும்.
இரண்டாவது, 'ஆஷா'. இது பன்மொழிகளில் செயல்படும் ஏ.ஐ., தொழில்நுட்பம் கொண்ட மக்கள் குறைதீர்ப்பு மற்றும் தொடர்பு தளம். 'வாட்ஸாப்' மற்றும் 'சாட்பாட்' சேவைகளுடன், இந்த தளம் இணைக்கப்படும். நாள்தோறும் மூன்று லட்சம் புகார்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்களை கையாளும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது, 'சாக்ஷம்'. வினியோக தொடர்பு நிர்வாகத்தை மேம்படுத்தும் ஏ.ஐ., தளம் இது. ரேஷன் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை கண்காணித்தல், 'க்யூஆர்' கோடு அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் உணவு தானிய தேவையை முன்கூட்டியே கணிக்கும் கருவிகள் இதில் அடக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் கணிப்பின்படி, இந்த நவீன தளவாட மேலாண்மை மூலம் உணவு தானிய போக்குவரத்துக்கான பயண துாரம் 15 - 50 சதவீதம் வரை குறையும். இதனால் செயல்பாட்டு திறன் அதிகரிப்பதுடன், போக்குவரத்து செலவும் கணிசமாக குறையும்.
செயற்கை நுண்ணறிவு, 'மெஷின் லேர்னிங்', கணினி மொழி செயலாக்கம் மற்றும் 'பிளாக்செயின்' போன்ற உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரேஷன் வினியோக முறையை நவீனப்படுத்துவதே 'சார்தக் பி.டி.எஸ்.,' திட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயன்பெறும் 81.35 கோடி பயனாளிகளின் உணவு பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire