Paristamil Navigation Paristamil advert login

மதுராந்தகம் தொகுதியை த.வெ.க.,விடம் கேட்கிறது வி.சி.க.,

மதுராந்தகம் தொகுதியை த.வெ.க.,விடம் கேட்கிறது வி.சி.க.,

7 ஆனி 2026 ஞாயிறு 07:34 | பார்வைகள் : 699


இடைத்தேர்தலில், மதுராந்தகம் தொகுதியை ஒதுக்குங்கள்' என, தமிழக வெற்றிக் கழகத்திடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு இரு தொகுதிகளில் வென்ற வி.சி.க., தேர்தலுக்கு பின் அமைந்த த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்து, அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. வி.சி.க., தலைவர் திருமாவளவனை அமைச்சராக்க முயற்சி நடந்தது. முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியை, திருமாவளவனுக்கு விட்டுத்தர, த.வெ.க., முன்வந்தது.

அதை ஏற்க திருமாவளவன் மறுத்து விட்டார். இதற்கிடையே, வி.சி.க.,வில் உட்கட்சி பிரச்னையால், சிலர், தி.மு.க.,வில் இணைய தயாராகி வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்த, சிலருக்கு வாரிய தலைவர் பதவிகளையும், இடைத்தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதியை பெறவும், வி.சி.க., தலைமை முயற்சித்து வருகிறது.

இது குறித்து, வி.சி.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு முயற்சி செய்தோம். அது, காங்கிரசுக்கு தரப்பட்டது. தற்போது, அ.தி.மு.க.,வினர் ராஜினாமா செய்த நான்கு தொகுதிகள் உட்பட ஐந்து சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதால், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, திருமாவளவனுக்காக திருச்சி கிழக்கு தொகுதியை விட்டுத் தர த.வெ.க., முன்வந்தது.

இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை, வி.சி.க.,வுக்கு ஒதுக்கும் படி கேட்டுள்ளோம். வன்னியர் மற்றும் பட்டியலினத்தவர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால், வி.சி.க.,வுக்கு ஒதுக்கினால் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்து உள்ளோம்.

மதுராந்தகம் தொகுதியை ஒதுக்காவிட்டாலும், வேறு தொகுதிகளில் ஒன்றை ஒதுக்குமாறு, த.வெ.க.,விடம் கேட்டுள்ளோம். திருமாவளவன் போட்டியிட்டால் தருவதாக, த.வெ.க., கூறுகிறது. தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.