22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை; தமிழக பட்ஜெட் தயாரிப்பு தாமதம்!
18 வைகாசி 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 1808
இன்னும், 22 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாததால், தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல், 23ம் தேதி நடந்தது. இதற்கான அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியிடப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அப்போதே அமலுக்கு வந்தன. இதற்கு முன்பாக, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், பிப்ரவரி, 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைந்து, த.வெ.க., ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதல்வர் விஜய் மற்றும் புதிய அமைச்சர்கள் ஒன்பது பேர், கடந்த 10ம் தேதி பதவி ஏற்றனர். இவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதையடுத்து, நடப்பு, 2026 - 27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டி அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நிலுவையில் உள்ள திட்டங்கள், புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது.
ஆனால், வனம், சுற்றுச்சூழல், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு, சிறு தொழில்கள், சமூக நலம், மீன் வளம், பால் வளம், கால்நடை பராமரிப்பு, சுற்றுலா, போக்குவரத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை, உயர் கல்வி தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன் உள்ளிட்ட, 22 துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால், பட்ஜெட் தயாரிப்பு பணிகளை துவங்குவதில், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து, நிதித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
ஒன்பது அமைச்சர்களை நியமித்து, முக்கியமான துறைகளை, அவர்களுக்கு முதல்வர் விஜய் ஒதுக்கியுள்ளார். துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், ஆய்வு கூட்டங்களை நடத்தி, பட்ஜெட் தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், 22 துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாததால், ஆய்வு கூட்டங்களை நடத்த முடியாத நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், துறைச் செயலர்கள் குழப்பத்தில் உள்ளனர். இப்போதே பட்ஜெட் பணிகளை துவங்கினால் தான், அமைச்சர்கள் ஒப்புதல் பெற்று, அவற்றை நிதித்துறைக்கு அனுப்பி, பட்ஜெட்டில் இடம்பெற செய்ய முடியும்.
காலம் கடத்தினால், பட்ஜெட் தாக்கல் தேதியை தள்ளிப்போட வேண்டிய நெருக்கடி உருவாகும்; அரசின் நிர்வாக பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து, நிதி ஒதுக்க வேண்டும். இது தாமதமானால், குறுவை தொகுப்பு உள்ளிட்ட சலுகைகளை, விவசாயிகளுக்கு வழங்குவதில் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு நிதித்துறை வட்டாரங்கள் கூறின.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire