Paristamil Navigation Paristamil advert login

குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால் பாதியிலேயே பயணம் முடிந்துவிடும்!பிரதமர்

குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால் பாதியிலேயே பயணம் முடிந்துவிடும்!பிரதமர்

13 ஆவணி 2026 வியாழன் 11:54 | பார்வைகள் : 326


சுயசரிதைகளை இளைஞர்கள் படிக்க வேண்டும். மற்றவர்களின் வாழ்க்கை போராட்டங்களிலிருந்து கற்க வேண்டும். இன்றைய 'ரீல்ஸ்' யுகத்தில், குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால், உங்கள் பயணம் பாதியிலேயே முடிந்து விடும் என்பதை இளைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், 80, நாட்டின் 14வது ஜனாதிபதியாக, 2017 - 22 வரை பதவி வகித்தார். இவர், 'ட்ரையம்ப் ஆப் தி இந்தியன் ரிபப்ளிக்: மை லைப், மை ஸ்ட்ரகிள்ஸ்' என்ற பெயரில், சுயசரிதை எழுதி உள்ளார். டில்லியில் நேற்று நடந்த இதன் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுயசரிதையை வெளியிட்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது:

கடினமான சூழல்களை கடந்து, உறுதியான மனப்பான்மையுடன், நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை ஒருவர் எவ்வாறு அடைய முடியும் என்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை, ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றும் கூட, பொது வாழ்வில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நாட்டின் ஜனநாயகத்தில் புதிய அத்தியாயத்தை திறக்கக்கூடிய, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தில் அவர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தை, அதை நேரில் அனுபவித்த ஒருவரின் வாழ்க்கையின் மூலம் புரிந்து கொள்ளும் வாய்ப்பை சுயசரிதைகள் வழங்குவதால், அவற்றை இளைஞர்கள் வாசிக்க வேண்டும்.

'ரீல்ஸ்' எனப்படும் குறும்பட வீடியோக்கள் நிறைந்த இன்றைய யுகத்தில், சமூக ஊடக பிரபலங்கள் உங்களை வேறு பாதைக்கு அழைத்துச் செல்லலாம். ஆனால், குறுக்கு வழிகள் உங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்து விடும் என்பதை இளைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ராம்நாத் கோவிந்தின் இந்த சுயசரிதை, நாட்டின் ஜனநாயகத்தின் ஒரு பாரம்பரிய சின்னமாக மாறும்.

இளம் தலைமுறையினர் இதிலிருந்து கற்க வேண்டியவை அதிகம். எதிர் காலத்தில் ராம்நாத் கோவிந்தை போன்ற இன்னும் பல இளைஞர்கள் நமக்கு தேவை. அதாவது, சூழ்நிலைகளால் தோற்கடிக்கப்படாமல், ஒவ்வொரு சவாலையும் முறியடிக்கும் உறுதியை கொண்ட இளைஞர்கள் வேண்டும்.

அவர்கள், 'சுயசார்பு இந்தியா'வுக்கான பாதையை ஏற்படுத்துவர். இந்த சுயசரிதை, இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.