Paristamil Navigation Paristamil advert login

சென்னையில் சொத்து வரி மாற்றியமைப்பை நிறுத்தி வைக்க முடிவு

சென்னையில் சொத்து வரி மாற்றியமைப்பை நிறுத்தி வைக்க முடிவு

14 ஆவணி 2026 வெள்ளி 11:12 | பார்வைகள் : 185


சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சொத்து வரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சென்னை மாநகராட்சி, சத்தமின்றி சொத்து வரியை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதாக, சுமார் 30,000 சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட வரி உயர்வு ஆணைகள் மூலம் தெரியவந்தது. இதுதொடர்பாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், 'சொத்து வரி உயர்த்தப்படவில்லை; வரி மறு சீராய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது' என மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சொத்து வரி மாற்றியமைப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருத்திய வரி மதிப்பீடு தொடர்பாக பொதுமக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான வரி மதிப்பீட்டை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இதையடுத்து, முன்பு இருந்த அளவுக்கே வரித்தொகை மீண்டும் மாற்றியமைக்கப்படும். ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்ட வரித்தொகையை செலுத்தியவர்களுக்கு, அவர்கள் செலுத்திய கூடுதல் தொகை அடுத்தடுத்த முன்வரியாக ஈடு செய்யப்படும்.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் சமீரன் தெரிவித்துள்ளார்.