Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் சில உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை!

கனடாவில் சில உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை!

14 ஆவணி 2026 வெள்ளி 08:01 | பார்வைகள் : 175


ஒன்டாரியோவில் இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட 'ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்' நிறுவனத்தின் சில சாஸ்கள், குவாக்கமோல் மற்றும் பிற ஆயத்த உணவுகளில் 'சால்மோனெல்லா' பாக்டீரியா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவை திரும்பப் பெறப்படுவதாக கனடாவின் உணவுத் ஆய்வு முகவரகம் அறிவித்துள்ளது.

மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார மிளகாய் மூலமாகவே இந்த பாக்டீரியா பரவியுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்ட நோய் பரவலுக்கும் இந்த மிளகாய்களே காரணம் எனக் கூறப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாகவே கனடாவிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இந்த உணவுகளை உட்கொண்டதால் இதுவரை யாருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என்று கனடாவின் உணவுத் ஆய்வு முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

திரும்பப் பெறப்படும் பொருட்களில் பல்வேறு வகையான 'சால்சா', 'குவாக்கமோல்', 'பிகோ டி காலோ' மற்றும் 'சிக்கன் கெசடிலா' போன்ற ஆயத்த உணவுகள் அடங்கும். 

இவை ஆகஸ்ட் 16 வரை காலாவதி திகதியைக் கொண்ட தயாரிப்புகளாகும்.

சால்மோனெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுகள் பார்ப்பதற்கோ அல்லது வாசனைக்கோ கெட்டுப்போனது போல் தெரியாது.

ஆனால், அவற்றை உட்கொள்வது உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். 

குறிப்பாக சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.