Paristamil Navigation Paristamil advert login

கரூர் நெரிசல்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி; ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

கரூர் நெரிசல்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி; ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

15 ஆவணி 2026 சனி 08:12 | பார்வைகள் : 192


கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசு பணியை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் அரசு பணி வழங்குவதற்கான உத்தரவுகளை முதல்வர் விஜய் வழங்கியிருந்தார்.

### மனுக்கள் தாக்கல்

இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதேபோல், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் சீனி அகமது மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோரும் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசு வழங்கிய பணி நியமன உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கி அரசு உதவியிருக்கலாம். அது, அரசு பணி வழங்குவதைவிட பயனுள்ளதாக இருக்கும்” என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

### சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 14) சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “மாநில அரசு கருணை அடிப்படையில் பணி வழங்க விரும்பினால், இதில் உயர் நீதிமன்றத்திற்கு என்ன பிரச்னை இருக்கிறது? வேலைவாய்ப்பு தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது” என்று வாதிட்டார்.

### ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

இதையடுத்து, கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

மேலும், “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. கருணை அடிப்படையில் பணி வழங்கக்கூடாது என்று கூற நீங்கள் யார்?” என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

### சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:

* ஒரு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் என்ன பிரச்னை?
* கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்றும், பண இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசு முடிவு செய்தால், அவர்களுக்கு வேலை வழங்கக்கூடாது என்று நீங்கள் எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும்?
* அந்த துயரச் சம்பவத்தில் குடும்பத்தின் ஒரே உறுப்பினர் உயிரிழந்துவிட்டால், அவரது மகனுக்கோ அல்லது மகளுக்கோ அரசு ஏதேனும் வேலை வழங்க வேண்டாமா?
* கரூர் நெரிசல் என்பது ஒரு துயரச் சம்பவம். இதில் அரசியல் செய்யக்கூடாது.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.