Paristamil Navigation Paristamil advert login

பாஜவுடன் திமுக நேரடி கூட்டணி; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

பாஜவுடன் திமுக நேரடி கூட்டணி; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

15 ஆவணி 2026 சனி 09:14 | பார்வைகள் : 158


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:

காவிரி நதி நீர் உரிமை தொடர்பான தமிழக அரசின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கவும், தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைப் பெறவும், முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காக சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். திமுக இதற்கு முன்பு பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருந்தது. தற்போது நேரடியாக கூட்டணியில் உள்ளது.

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், திருச்சி சிவா விரைவில் மத்திய அமைச்சராக இருப்பார் என்று கூறுகிறார். இதன்மூலம், இரு கட்சிகளும் அனைத்து பேச்சுவார்த்தைகளையும் முடித்துவிட்டு அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துவிட்டது என்பது அப்போதே புரிந்துவிட்டது.

சபாநாயகர் ஓம்பிர்லா அளித்த தேநீர் விருந்தில் திமுக எம்பி கனிமொழி பங்கேற்றதன் மூலம் பாஜகவுடன் திமுகவின் நேரடி கூட்டணி உறுதியாகியுள்ளது. குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் வழக்குகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக திமுக, பாஜகவுடன் நேரடியாக கூட்டணி அமைக்கத் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.

முந்தைய ஆட்சியில் கட்சி நிதியாக வசூலிக்கப்பட்டது தற்போது அரசின் வருவாயாக வருகிறது. கடந்த ஆட்சியில் குடும்பத்துடன் அமர்ந்து தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

டெல்லியில் யாருடன் முதல்வர் விஜய் பேசினாலும் அது வெளிப்படையாகவே இருக்கும். தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் எந்த இடத்திலும் சொத்து வரி உயர்த்தப்படவில்லை; அது முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.