Paristamil Navigation Paristamil advert login

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளத் தடை: அரசியலமைப்பு பேரவை அதிரடி தீர்ப்பு!!

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளத் தடை: அரசியலமைப்பு பேரவை அதிரடி தீர்ப்பு!!

15 ஆவணி 2026 சனி 07:16 | பார்வைகள் : 291


15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் சட்டத்தின் முக்கியப் பிரிவை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது. இந்தத் தடை, சிறார்களின் கருத்து மற்றும் தகவல் தொடர்பு சுதந்திரத்தில் “அளவுக்கு மீறிய தலையீட்டை” ஏற்படுத்துவதாக பேரவை தெரிவித்துள்ளது. TikTok, Snapchat, Instagram, X உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலிருந்து 15 வயதுக்குட்பட்டவர்களை விலக்க இந்தச் சட்டம் திட்டமிட்டிருந்தது. அதேவேளை, உயர்நிலைப் பாடசாலைகளில் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் கையடக்கத் தொலைபேசிகளுக்குத் தடை விதிப்பது தொடர்பான சட்டப்பிரிவு குறித்து பேரவை எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை.

சிறார்களின் உடல்நலம் மற்றும் மனநலப் பாதுகாப்பைப் பாதுகாப்பது அரசியலமைப்பு ரீதியாக முக்கியமானது என்பதை ஏற்றுக்கொண்ட பேரவை, அனைத்து இணையதள சேவைகளையும் ஒரே விதமாகத் தடை செய்வது தேவையானதும், பொருத்தமானதும், அளவானதுமாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அனைவரிடமும் வயதைச் சரிபார்க்கும் நடைமுறை மூலம் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.  ஆனால், இணையதள கலைக்களஞ்சியங்கள், கல்வி மற்றும் அறிவியல் தளங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விதிவிலக்குகள் மிகவும் குறுகியதாக இருந்ததாகவும் பேரவை தெரிவித்துள்ளது.

15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக வலைத்தளத் தடையை அமல்படுத்தும் பிரான்ஸின் முயற்சி இத்தீர்ப்பால் பின்னடைவை சந்தித்துள்ளது. இதேபோன்ற கட்டுப்பாடுகளை பல நாடுகள் பரிசீலித்து வருகின்றன. 2025ஆம் ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளத் தடையை அறிமுகப்படுத்திய முதல் நாடாக மாறியது. எனினும், அங்கு தடையின் தாக்கம் கலவையானதாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில சிறார்கள் வயது வந்தோரின் பெயரில் கணக்குகளைப் பயன்படுத்துவது அல்லது VPN மூலம் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பது போன்ற வழிகளையும் பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் சிறார்களுக்கு சமூக வலைத்தள அணுகலை படிப்படியாகக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது; 13 வயதுக்குட்பட்டோருக்கு தடை விதிக்க நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.