Paristamil Navigation Paristamil advert login

சீனா உருவாக்கிவரும் மாக்லெவ் ரயில் புதிய சாதனை

சீனா உருவாக்கிவரும் மாக்லெவ் ரயில் புதிய சாதனை

15 ஆவணி 2026 சனி 11:33 | பார்வைகள் : 161


சீனா உருவாக்கிவரும் மாக்லெவ் ரயில் 5.3 விநாடிகளில் 800 கிமீ வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள டோங்ஹூ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 1,110 கிலோ எடையுடைய சோதனை ரயில் வண்டி, 1 கிமீ நீளமான பாதையில் 5.3 விநாடிகளில் 800 கிமீ வேகம் எட்டியுள்ளது.

இது கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது உலகச் சாதனையாகும். இந்த ரயில், மாக்லெவ் (Maglev) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. காந்த சக்தியின் மூலம் ரயில் பாதையுடன் நேரடி தொடர்பு இல்லாமல் மிதந்து செல்லும். இதனால், உராய்வு குறைந்து மிக வேகமாக முன்னேற முடிகிறது.

முன்னதாக, 2025 ஜூன் மாதத்தில் இந்த ரயில் 7.1 விநாடிகளில் 650 கிமீ வேகத்தை எட்டியது. பின்னர் 697 கிமீ, 798 கிமீ வேகங்களை எட்டியதும், இப்போது 800 கிமீ வேகத்தை கடந்துள்ளது.

ஆய்வாளர்கள், இந்த சோதனை பயணிகள் ரயிலுக்காக அல்ல எனவும், மாறாக ரொக்கெட், ட்ரோன், இராணுவ விமானங்கள் மற்றும் தொழில்துறை போக்குவரத்து போன்ற துறைகளில் பயன்படும் தொழில்நுட்பமாக வளரக்கூடும் எனவும் கூறுகின்றனர்.

இந்த வேகத்தில் செல்ல, பாதையின் சீரமைப்பு 0.5 மில்லிமீட்டர் துல்லியத்தில் இருக்க வேண்டும். மேலும், வண்டியின் நிலை, மிதப்பு, காந்த இயக்கம், அவசர பிரேக் போன்றவை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

சீனாவின் தற்போதைய வணிக மாக்லெவ் ரயில்கள் (Fuxing system) 349 கிமீ வேகத்தில் இயங்குகின்றன. ஆனால், இந்த சோதனை ரயில் அதைவிட இருமடங்கு வேகத்தில் இயங்குகிறது.

இந்த கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் எரிபொருள் செலவை குறைத்து ரொக்கெட் ஏவுதலுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.