Paristamil Navigation Paristamil advert login

ஊழல் செய்யவே மாட்டோம்; உறுதியாக சொல்கிறார் அமைச்சர் ஆனந்த்

ஊழல் செய்யவே மாட்டோம்; உறுதியாக சொல்கிறார் அமைச்சர் ஆனந்த்

17 ஆவணி 2026 திங்கள் 06:56 | பார்வைகள் : 147


தமிழக வெற்றிக் கழகத்தில் எந்த நேரத்திலும் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் மேல்நிலைக்கு வரலாம்; அதேபோல் மேல்நிலையில் இருப்பவர்கள் கீழ்நிலைக்கும் வரலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நடைபெற்ற தளபதி வெற்றி கல்வி மைய திறப்பு விழாவில் அமைச்சர் ஆனந்த் பேசியதாவது:

முதல்வர் விஜய் அளித்துள்ள அறிவுறுத்தலின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாணவர்கள், ஏழை எளியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக மக்களின் நலனைக் காப்பதற்காக நமது முதல்வர் விஜய் உண்மையாக உழைத்து வருகிறார்.

நாமும் உண்மையான உழைப்பை வழங்கி முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தொகுதியில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை தொடர்புகொண்டு அது குறித்து கேள்வி கேட்கும் முதல்வரை நாம் பெற்றுள்ளோம். அவர் எந்தச் செயலை மேற்கொண்டாலும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுபவர். அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டியது நமது பொறுப்பு.

பிற கட்சிகளில் 30, 40 ஆண்டுகளாக ஒரே நிர்வாகிகள் தொடர்ந்து பதவியில் இருப்பார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் எந்த நேரத்திலும் கீழே இருப்பவர்கள் மேலே வரலாம். அதேபோல் மேலே இருப்பவர்கள் கீழேயும் இறக்கப்படலாம். எனவே, கட்சி நிர்வாகிகள் அனைவரும் எப்போதும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

ஊழலற்ற ஆட்சியை இலக்காகக் கொண்டு செயல்படும் முதல்வருக்கு நாம் உறுதுணையாக இருப்போம். அமைச்சர்களாக இருந்தாலும், எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும், கட்சி நிர்வாகிகளாக இருந்தாலும், நாங்கள் ஒருபோதும் ஊழல் செய்ய மாட்டோம்.

இவ்வாறு அமைச்சர் ஆனந்த் பேசினார்.