Paristamil Navigation Paristamil advert login

சென்னை அருகே ஆந்திர தொழில் பூங்கா: ஏக்கர் ரூ.15 லட்சத்துக்கு அழைப்பு

சென்னை அருகே ஆந்திர தொழில் பூங்கா: ஏக்கர் ரூ.15 லட்சத்துக்கு அழைப்பு

18 ஆவணி 2026 செவ்வாய் 13:02 | பார்வைகள் : 209


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரத்தை அடுத்துள்ள ஆந்திராவின் கோசல்நகரில், அம்மாநில அரசு 2,000 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைத்து வருகிறது. இந்த தொழில் பூங்காவில் நிறுவனங்கள் தொடங்க ஏக்கருக்கு ரூ.15 லட்சம் என்ற விலையில் நிலம் வழங்கப்படும் என தமிழக தொழில் நிறுவனங்களுக்கு ஆந்திர அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக தொழில் துறையினர் கூறியதாவது:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல தொழில் நிறுவனங்கள், தங்களது விரிவாக்கத் திட்டங்களுக்காக அந்த மாவட்டங்களில் புதிய இடங்களைத் தேடி வருகின்றன.

ஆனால், மேற்கண்ட மாவட்டங்களில் நிலத்தின் விலை மிகவும் அதிகமாக இருப்பதுடன், தேவையான அளவில் நிலமும் கிடைப்பதில்லை. இதை அறிந்துள்ள ஆந்திர அரசு, தமிழக தொழில் நிறுவனங்களை தங்கள் மாநிலத்திற்கு ஈர்க்க திட்டமிட்டு வருகிறது.

இதற்காக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை ஆந்திர அரசு அதிகாரிகள் நேரடியாக சந்தித்து வருகின்றனர். தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திரப் பகுதிகளில் முதலீடு செய்தால் அதிகளவில் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்து, ஒவ்வொரு நிறுவனத்தினரையும் தனித்தனியாக சந்தித்து வருகின்றனர்.

தற்போது, சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், ஆந்திர எல்லைக்குள் கோசல்நகரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 2,000 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருவதாகவும், அங்கு தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 லட்சம் விலையில் நிலம் வழங்கப்படும் என்றும் ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஆந்திராவின் இந்த முயற்சிக்கு முன்பாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் தொழிற்பேட்டைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை விரைவாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக தொழில் துறையினர் தெரிவித்தனர்.
 

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2