Paristamil Navigation Paristamil advert login

அமைச்சர் நிர்மல் குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு

அமைச்சர் நிர்மல் குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு

19 ஆவணி 2026 புதன் 07:37 | பார்வைகள் : 296


### கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை சட்டசபை கூட்டம் தொடங்கியதும், கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக சார்பில் இபிஎஸ், பாமக சார்பில் சௌமியா, பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்தனர். தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

### "ஏற்றுக்கொள்ள முடியாது"

கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்து பேசியதாவது:

"கர்நாடக வனப்பகுதியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கர்நாடக முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக வனத்துறையின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது.

முதலில் சுட்டது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்மையான, உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதல்-அமைச்சர் விஜய். தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும், முதல் குரல் கொடுப்பவர் முதல்-அமைச்சர் விஜய்தான்" என்று அவர் தெரிவித்தார்.

### சபாநாயகர் கண்டனம்

தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "ஒருசில பேருக்கு திடீர் தமிழ் பாசமும், தமிழர்கள் மீதான பாசமும் இருக்கும். அதனை நாம் அனைவரும் வரலாற்றில் பார்த்திருக்கிறோம்" என்று கூறியதுடன், 2009-ம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்தார்.

இதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் குறுக்கிட்டு, அமைச்சர் நிர்மல்குமார் பேசிய தேவையற்ற கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.

மேலும், இனிமேல் தேவையற்ற கருத்துகளை பேச அமைச்சர் நிர்மல்குமாரை அனுமதிக்க மாட்டேன் என்றும், கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக மட்டுமே அனைவரும் பேச வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

அப்போது, "யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்?" என்று அமைச்சர் நிர்மல்குமாரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கண்டித்தார்.

இதனால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
 

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2