Paristamil Navigation Paristamil advert login

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

20 ஆவணி 2026 வியாழன் 07:06 | பார்வைகள் : 236


சென்னையில் செயல்பட்டு வரும் கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

### வருமானவரி சோதனை

சென்னை ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் செயல்பட்டு வரும் கணினி தொழில்நுட்பத் தொடர்பு நிறுவனத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

கணினி உதிரி பாகங்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்துக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிறிய நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற நிதிப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் மற்றும் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

### 5 இடங்களில் சோதனை

இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எர்ணாவூர், ஆழ்வார்பேட்டை, விருகம்பாக்கம், ராஜமங்கலம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் பதிவுகள் சரிபார்க்கப்பட்டன.

வரி செலுத்தாமல் வருவாயை மறைத்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, கணினி பதிவுகள் மற்றும் நிதி ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சோதனை நிறைவடைந்த பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், ரொக்கம் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

### லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இதற்கிடையில், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் பெருங்குடியில் 4 இடங்கள், அண்ணா நகரில் 3 இடங்கள் உள்பட 27 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுதவிர, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலும் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2