Paristamil Navigation Paristamil advert login

மேகமலை ஆக்கிரமிப்பு: ராணுவம் அனுப்ப நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

மேகமலை ஆக்கிரமிப்பு: ராணுவம் அனுப்ப நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

20 ஆவணி 2026 வியாழன் 13:00 | பார்வைகள் : 180


தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற வேண்டும். அங்குள்ள இலவம்பஞ்சு தோட்டங்களையும் கையகப்படுத்தி, அங்கு பணியாற்றும் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், வனப்பகுதியைப் பாதுகாக்க துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேனி மாவட்டம் மேகமலை மற்றும் நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா கூறுகையில், “மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4,600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்கான மாற்று இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுகிறது,” என்றார்.

### நீதிபதிகள் உத்தரவு

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மேகமலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள இலவம்பஞ்சு தோட்டங்களில் பணியாற்ற ஆட்களை அமர்த்தியதே ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, புலிகள் சரணாலயத்தில் உள்ள இலவம்பஞ்சு தோட்டங்களை முழுமையாக கையகப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் எந்த சலுகையும் காட்டக்கூடாது.

அதேபோல், விடுதிகளை மூடுவது மட்டும் போதாது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டடங்கள் அனைத்தையும் இடித்து அகற்ற வேண்டும்.

ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யாருக்கும் நிலப்பட்டா வழங்கக்கூடாது.

மாநில அரசால் ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், வனப்பகுதியைப் பாதுகாக்க துணை ராணுவப் படையை அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும்.

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கான நிலை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2