Paristamil Navigation Paristamil advert login

காவிரி தீர்ப்பை பின்பற்ற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்

காவிரி தீர்ப்பை பின்பற்ற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்

21 ஆவணி 2026 வெள்ளி 06:04 | பார்வைகள் : 187


மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, கேரள முதல்-மந்திரி சதீசன், புதுச்சேரி மாநில கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் பேசியதாவது:-

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய என்ஜின்களாக தென்மாநிலங்கள் உள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்கு 30 சதவீதமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்.

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முறையாக பின்பற்ற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தின் நதிநீர் உரிமையை பாதுகாக்க வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

பெங்களூரு மெட்ரோ ரெயில் சேவையை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும். இது சிறந்த உள்கட்டமைப்பாக அமையும். ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும்.

தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையாது என்பதற்கு சட்டப்பூர்வ உறுதியளிக்க வேண்டும். மக்கள்தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக தென் மாநிலங்கள் தங்களது பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது.

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நீதித்துறை உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைமடை மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

மாநிலங்களின் நிதி தன்னாட்சியை மதிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு நியாயமான நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும். மாநிலங்களின் செயல்திறன் மற்றும் வளர்ச்சி முதலீடுகளை கருத்தில் கொண்டு நியாயமான நிதிப்பகிர்வை வழங்க வேண்டும்.

தென்மாநிலங்களை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரம்புகளைத் தீர்மானிக்கும் நெகிழ்வுத்தன்மையை மாநிலங்கள் மீண்டும் பெற வேண்டும்.

போதைப்பொருட்களை தடுக்க மாநிலங்களுக்கு இடையே கூட்டமைப்பு தேவை. கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம். சகோதர மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2