Paristamil Navigation Paristamil advert login

கட்டுமான பொருட்கள் கட்டுப்பாடு : கேரளாவுக்கு விலக்கு? விஜய் பரிசீலனை

கட்டுமான பொருட்கள் கட்டுப்பாடு : கேரளாவுக்கு விலக்கு? விஜய் பரிசீலனை

22 ஆவணி 2026 சனி 08:10 | பார்வைகள் : 162


மற்ற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள், குறிப்பாக கற்கள், ஜல்லி உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசனிடம், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உறுதியளித்ததாக கேரள முதல்-மந்திரி அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

**மறுபரிசீலனை**

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தெற்கு மண்டலக் குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் சதீசன் இந்த விவகாரத்தை எழுப்பியதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் சிறப்பு சூழலை கருத்தில் கொண்டு, கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சதீசன் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மேலும் ஆலோசனை நடத்தி, விரைவில் உரிய முடிவு எடுக்க இரு முதல்-அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**விஜய்க்கு கடிதம்**

இதற்கு முன்னதாக, கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிக்கக் கோரி சதீசன், விஜய்க்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருந்ததாவது:-

“தமிழகத்தில் இருந்து ஜல்லிக் கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்தேன். இந்த நடவடிக்கையால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கட்டுமானக் கற்கள் வருவது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் கற்களையே பெரிதும் நம்பியுள்ளன.

எனவே, தற்போதைய தடையால் கேரளாவில் நடைபெற்று வரும் பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு, அவை தாமதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென் மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி, பிராந்திய இணைப்பு, சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கும் முக்கியமானவை.

**கேரளா பாராட்டு**

குறிப்பாக, விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தையும், வல்லார்பாடம் சர்வதேச கண்டெய்னர் முனையத்தையும் இணைக்கும் தடையற்ற போக்குவரத்து மூலம் தென்னிந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் போட்டித்தன்மையும் அதிகரிக்கும்.

இயற்கை வளங்களை நிலையாகப் பாதுகாக்கும் தமிழக அரசின் கொள்கை நோக்கங்களை கேரளா பாராட்டுகிறது. அதேநேரத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களின் நியாயமான தேவையை கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறையை உருவாக்கினால், உங்கள் கொள்கையிலும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

எனவே, கேரளாவில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய உள்கட்டமைப்புப் பணிகளுக்கு பிரத்யேகமாகத் தேவைப்படும் ஜல்லிக் கற்களை மட்டும் தடையின்றி கொண்டு செல்ல வசதியாக, உரிய தளர்வு அல்லது சிறப்பு நடைமுறையை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3