Paristamil Navigation Paristamil advert login

டாஸ்மாக் டெண்டர் வழக்கு: செந்தில் பாலாஜியிடம் 3 மணி நேரம் விசாரணை

டாஸ்மாக் டெண்டர் வழக்கு: செந்தில் பாலாஜியிடம் 3 மணி நேரம் விசாரணை

23 ஆவணி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 192


'டாஸ்மாக்' மதுபான கொள்முதல் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

திமுக ஆட்சிக் காலத்தில், டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட டெண்டர்கள் மற்றும் மதுபான கொள்முதல் பணிகளில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையும் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று ஆக. 22 காலை 10:55 மணியளவில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். கூட்டு சதி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது மற்றும் டெண்டர் விதிகளில் முறைகேடு செய்தது தொடர்பாக அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

மூன்று மணி நேரத்திற்கும் மேலான விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் கூறியதாவது:

“லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய விளக்கம் அளித்துள்ளேன். எனது பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு சட்ட ரீதியாக நிலுவையில் இருப்பதால், அது குறித்து பொது வெளியில் எதுவும் பேச முடியாது.

இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், உள்நோக்கத்துடனும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதைவிட, எதிர்க்கட்சியினர் மீது வழக்குகளைத் தொடுப்பதிலேயே அதிக முனைப்பு காட்டி வருகிறது. எத்தனை வழக்குகள் வந்தாலும், அவற்றை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

சட்டசபையில் தற்போது ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவில்லை. தவெக அமைச்சர்கள் பதில் சொல்லத் திணறி, கூச்சல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி விவாதத்தை திசை திருப்புகின்றனர்.

மின்துறையில் 18 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக கூறிவிட்டு, பின்னர் 38 ஹார்டு டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். காணாமல் போனது 18 என்றால், மீதமுள்ள 20 ஹார்டு டிஸ்க்குகள் எங்கிருந்து வந்தன? இதுகுறித்து மின்துறை அமைச்சரிடம் பதில் இல்லை.

மின் வாரியத்தில் ரூ.14,500 கோடியாக இருந்த கடன், திமுக ஆட்சியில் ரூ.930 கோடியாக குறைக்கப்பட்டது. இது தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், சட்டசபையில் திமுக ஆட்சியில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

தன் கையில் மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் கூறியிருந்தார். அவற்றை வெளியிடுங்கள் என நாங்கள் சவால் விடுத்து 24 மணி நேரத்தைக் கடந்துவிட்டது. இன்னும் அந்தக் கோப்புகள் வெளியிடப்படவில்லை என்றால், அவர்களிடம் அத்தகைய கோப்புகள் எதுவும் இல்லை.”

இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3