Paristamil Navigation Paristamil advert login

ஊழல் பைல்கள் எப்போது வெளிவரும்? இடைத்தேர்தலுக்கு த.வெ.க.வின் ஸ்கெட்ச்

ஊழல் பைல்கள் எப்போது வெளிவரும்? இடைத்தேர்தலுக்கு த.வெ.க.வின் ஸ்கெட்ச்

24 ஆவணி 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 222


முதல்-அமைச்சர் விஜய்யின் மேஜையில் உள்ளதாக கூறப்படும் ஊழல் தொடர்பான 'பைல்கள்' எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான த.வெ.க. 'ஸ்கெட்ச்' போட்டு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலியாக உள்ள 7 தொகுதிகள்

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.

இந்த தொகுதிகளில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக, அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இடைத்தேர்தல் எப்போது?

இந்த நிலையில், மேற்கண்ட 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட்டு விதித்திருந்த தடை நாளையுடன் (ஆகஸ்டு 24) முடிவடைய உள்ளது.

இதையடுத்து, விரைவில் இந்த 5 தொகுதிகள் உள்பட காலியாக உள்ள மொத்தம் 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்திருந்தாலும், அந்த கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

த.வெ.க.வுக்கு மெஜாரிட்டி இல்லை

மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், த.வெ.க.வுக்கு 107 இடங்களே கிடைத்தன.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2 உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 2 உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது.

இதில், இரு கம்யூனிஸ்டு கட்சிகளை தவிர மற்ற 3 கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால், அந்த கட்சிகளால் த.வெ.க. அரசுக்கு உடனடி ஆபத்து ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

ஆனால், மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் எந்த நேரத்திலும் கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழ்நிலை இருக்கலாம்.

இடைத்தேர்தல் வெற்றி முக்கியம்

அவ்வாறு நடந்தால், த.வெ.க. அரசு பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும். இதனால், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது த.வெ.க.வுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 7 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்றால், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 114 ஆக உயரும்.

இது மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களை விட 4 குறைவாக இருந்தாலும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ஆதரவு அல்லது ஏனைய கட்சிகளில் 2 கட்சிகளின் ஆதரவு த.வெ.க.வுக்கு கிடைத்தாலே போதுமானதாக இருக்கும். இதன் மூலம் 5 ஆண்டு கால ஆட்சிக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

பொதுவாக, இடைத்தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளன. அந்த வகையில், இந்த முறை கிடைக்கும் சாதகமான முடிவு த.வெ.க. அரசுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது.

இதற்காக த.வெ.க. தயாராகி வருவது சமீபத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபையில் பேசியபோதும் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது.

முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

கடந்த 19-ந் தேதி சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வின்போது, அமைச்சர்கள் ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அப்போது எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கூறியதாவது:-

"நான் இதை சொல்ல வேண்டாம் என நினைத்தேன். ஆதாரம், ஆதாரம் என கேட்கின்றனர். ஒரு வாரத்திற்கு முன், இங்கு நிதி அமைச்சர் பேசும்போது, 3 துறைகள் தொடர்பாக ஆய்வு செய்து, அது தொடர்பான விபரம் எனது மேஜையில் இருக்கிறது என சொன்னார்.

அவர் போகிற போக்கில் அதை சொல்லவில்லை. உண்மையிலேயே என் மேஜையில் அத்தனையும் ஆதாரத்துடன் இருக்கின்றன. அதை 'ஓபன்' பண்ண வைத்துவிடாதீர்கள். எதை, எப்போது 'ஓபன்' பண்ண வேண்டுமோ, அப்போது அது கரெக்டாக 'ஓபன்' செய்யப்படும்.

மக்களிடம் எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என எல்லாவற்றையும் பேசிவிட்டுத்தான், அன்பா.. ஆசையா.. எங்கள் எல்லோரையும் கொண்டு வந்து இங்கே உட்கார வைத்துள்ளார்கள்.

நான் பேசுவேன், பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. இடைத்தேர்தலிலாவது ஒரு சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா?"

என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.

த.வெ.க. போடும் 'ஸ்கெட்ச்'

முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த பேச்சின் மூலம், இடைத்தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. திட்டமிட்டு தயாராகி வருவது தெளிவாக தெரிகிறது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "மேஜையில் இருக்கும் பைல்களை சீக்கிரம் திறந்து பாருங்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் தி.மு.க. உறுப்பினர்கள் பயப்படமாட்டார்கள்" என்று பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், அந்த 3 பைல்களில் இடம்பெற்றுள்ள விவரங்கள் எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆனால், எப்போது, எப்படி அந்த பைல்களை வெளியிடுவது என்பது குறித்து த.வெ.க. ஏற்கனவே திட்டம் வகுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு!

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்தில், முதல்-அமைச்சர் விஜய்யின் மேஜையில் உள்ளதாக கூறப்படும் ஊழல் பைல்களில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு அந்த விவரங்கள் வெளியிடப்பட்டால், மக்கள் மத்தியில் த.வெ.க.வின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இடைத்தேர்தலில் த.வெ.க.வின் வெற்றியை எதிர்க்கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் எப்படி தடுக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்