Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் விமானி போல நடித்து பெண் செய்த அதிர்ச்சி செயல்

இலங்கையில் விமானி போல நடித்து பெண் செய்த அதிர்ச்சி செயல்

23 ஆவணி 2026 ஞாயிறு 16:29 | பார்வைகள் : 182


விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தால் கைது செய்யப்பட்டு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஆவார்.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் இந்த விசாரணையைத் தொடங்கியது.

சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறியுள்ளார். தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் கூறி அவரிடம் பணத்தைப் பறித்துள்ளார்.

பேருந்து உரிமையாளர் தனது பேருந்து ஒன்றை விற்று 60 லட்சம் ரூபாய் அந்த பெண்ணிடம் வழங்கியுள்ளார். அந்தப் பணத்தைப் பெறுவதற்காகச் சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடையில் வந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, தான் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறி பேருந்து உரிமையாளரைத் தவிர்த்து வந்ததால், அவர் காவல்துறையிடம் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து, குருணாகல் பகுதியில் வைத்து சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 லட்சத்திற்கும் அதிகமான தொகையை அந்த பெண் மோசடி செய்துள்ளார்.

மேலும், இதற்கு முன்பும் வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடமிருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.

இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி, உட்பட 15 காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3