Paristamil Navigation Paristamil advert login

மின் கணக்கீடு விவகாரம்: அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

மின் கணக்கீடு விவகாரம்: அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

26 ஆவணி 2026 புதன் 10:34 | பார்வைகள் : 137


மின் கணக்கீடு செய்யப்படாத மாதங்களில், முந்தைய மாதத் தொகையை செலுத்துமாறு அறிவிக்கும் நடைமுறையை மின் அமைச்சர் தவறாகப் புரிந்துகொண்டு, மின் கணக்கீட்டாளர்கள் ‘டேபிள் ஒர்க்’ செய்ததாக சட்டசபையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்கு தவறான தகவலை வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தமிழக மின் வாரியத்தில் 3.20 கோடி மின் இணைப்புகள் உள்ளன. தொடர்ந்து புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதால், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்தம் 7,591 கணக்கீட்டாளர் பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது 1,500 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். சுமார் 6,000 பணியிடங்கள் காலியாக இருப்பதால், ஆய்வாளர்களும் மின் கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சில நேரங்களில் நிர்வாக காரணங்களால் மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்படும். அப்போது, முந்தைய மாதங்களில் செலுத்திய தொகையையே செலுத்துமாறு மின்வாரியம் அறிவிக்கும். அடுத்தடுத்த மாதங்களில் முறையாக அளவீடு செய்து, மின் கணக்கீடு சரிசெய்யப்படும்.

சமீபத்தில் பலருக்கும் மின் கட்டணம் அதிகமாக வந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஜூலை மாதத்தில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 0.6 சதவீதம் மட்டுமே குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால், கடந்த காலங்களில் மின் கணக்கீட்டாளர்கள் பணிக்குச் செல்லாமல் உத்தேசமாக ‘டேபிள் ரீடிங்’ செய்ததாகவும், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு மின் கணக்கீடு முறையாக நடைபெறுவதாகவும், பல மாதங்களாக கணக்கீடு செய்யாமல் இருந்துவிட்டு தற்போது கணக்கெடுத்ததால் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் சட்டசபையில் மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

இதற்கு பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

மின் கணக்கீட்டாளர்கள் விளக்கம்

சம்மேளனத்தைச் சேர்ந்த மின் கணக்கீட்டாளர்கள் கூறியதாவது:

“மின் வாரியத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. ஏதேனும் காரணங்களால் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், முந்தைய மாதத் தொகையை செலுத்துமாறு அறிவிப்பு வெளியிடப்படும். இதை பி.எம்.சி. (Previous Month Calculation) என்று குறிப்பிடுகிறோம். இதுவே மின்வாரியத்தின் நடைமுறையாகும்.

‘டேபிள் ரீடிங்’ என்பது கணக்கீட்டுப் பணிக்குச் செல்லாமல், மின் பயன்பாட்டை தோராயமாக கணக்கிட்டு, அதை கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்வதாகும். ‘டேபிள் ரீடிங்’ செய்வது தவறான நடைமுறையாகும்.

பி.எம்.சி. மற்றும் ‘டேபிள் ரீடிங்’ ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல், உயரதிகாரிகள் எழுதிக் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மின் அமைச்சர் சட்டசபையில் பேசியுள்ளார். இது மின் கணக்கீட்டாளர்களை மனதளவில் பாதித்துள்ளது.

கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறை காரணமாக, பல இடங்களில் பி.எம்.சி. முறையில் மின் கட்டணம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எடுக்கப்பட்ட மின் கணக்கீட்டையே வெயில் காலமான ஏப்ரல், மே மாதங்களில் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

குளிர்காலத்தில் மின் பயன்பாடு குறைவாக இருக்கும். ஆனால், கோடைக்காலத்தில் மின்விசிறி, ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிக்கும். வழக்கமாகவே ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் மின் கட்டணம் அதிகரிப்பது இயல்பானது. அதன்பிறகு மின் ரீடிங் எடுக்கும்போது, யூனிட் வித்தியாசமும் சேர்க்கப்படுவதால், ஒவ்வொருவருக்கும் அதிகமான மின் கட்டணம் வரும்.

முந்தைய மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படாததே இதற்குக் காரணம் என்று கூறுவதற்கு பதிலாக, கணக்கீட்டாளர்கள் ‘டேபிள் ஒர்க்’ செய்ததாக உயரதிகாரிகள் தெரிவித்த தகவலை நம்பி அமைச்சர் பேசியுள்ளார்.

எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டசபையில் அமைச்சர் பேசிய கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும்.”

இவ்வாறு மின் கணக்கீட்டாளர்கள் தெரிவித்தனர்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்