Paristamil Navigation Paristamil advert login

பிரிக்ஸ் மாநாடு: 400 பேர் குழுவுடன் இந்தியா வருகிறார் ஜி ஜின்பிங்?

பிரிக்ஸ் மாநாடு: 400 பேர் குழுவுடன் இந்தியா வருகிறார் ஜி ஜின்பிங்?

26 ஆவணி 2026 புதன் 11:38 | பார்வைகள் : 152


டெல்லியில் வரும் செப்டம்பர் 12, 13-ம் தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 12-ல் இந்தியா வருகை

டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக செப்டம்பர் 12-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா வர உள்ளதாக கூறப்படுகிறது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைய உள்ளது. மேலும், இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ம் ஆண்டு இந்தியா வந்தபோது 200-க்கும் குறைவான அதிகாரிகள் அவருடன் வந்திருந்தனர். ஆனால், இந்த முறை ஜி ஜின்பிங்குடன் சுமார் 400 அதிகாரிகள் கொண்ட குழு வர உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சீன அதிகாரிகள் தங்க உள்ள விடுதிகள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை இறுதி செய்யும் பணியில் இந்திய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, “பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து பங்கேற்கிறோம். இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக, தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியாவை ஆதரிக்கிறோம்” என்று சீன வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

எல்லைப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை

இதற்கிடையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், எல்லைப் பிரச்னை தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீனா சென்றுள்ளார்.

எல்லையில் அமைதி நிலவுவது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு மிகவும் அவசியம் என்பதில் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்