Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு! அச்சம் வேண்டாம் அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு! அச்சம் வேண்டாம் அரசு அறிவிப்பு

27 ஆவணி 2026 வியாழன் 05:49 | பார்வைகள் : 126


மாறி வரும் பருவநிலை காரணமாக டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரங்களில் கடும் வெயிலும், மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்த மாறுபட்ட பருவநிலையால் சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது.

### உரிய பரிசோதனை

டெங்கு மற்றும் இன்ப்ளுயன்ஸா தொற்றுகளால் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 12,543 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், இன்ப்ளுயன்ஸா வகையைச் சேர்ந்த பன்றிக்காய்ச்சலால் கடந்த 3 மாதங்களில் 339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளால் லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பருவகால காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்களுடன் வருவோருக்கு உரிய பரிசோதனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பன்றிக்காய்ச்சலுக்கான 'ஒசல்டாமிவிர்' மருந்து, டாக்டர்களின் ஆலோசனைப்படி தேவையான நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. கர்ப்பிணியர், குழந்தைகள், முதியோர் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடுமையான நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆய்வகப் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்காமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

### முன்னெச்சரிக்கை

'எச்1 என்1' எனப்படும் பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இது சிகிச்சை அளிக்கக்கூடிய நோயாகும். காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

பொதுமக்கள் கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல், இருமல் மற்றும் தும்மலின்போது சுகாதார முறைகளைப் பின்பற்றுதல், போதிய ஓய்வு எடுத்தல் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

நோய் பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்கு செல்வதன் மூலம் தீவிர பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். தற்போது பருவகால காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும், நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்