Paristamil Navigation Paristamil advert login

தமிழக நலனுக்கே மேகதாது அணை: கர்நாடக முதல்வர்

தமிழக நலனுக்கே மேகதாது அணை: கர்நாடக முதல்வர்

27 ஆவணி 2026 வியாழன் 07:53 | பார்வைகள் : 140


மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்துக்குத்தான் அதிக நன்மை கிடைக்கும் என்றும், இதை தமிழக முதல்வர் விஜயிடம் நேரில் தெரிவித்துவிட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான சிவகுமார் கூறினார்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு, அம்மாநில அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதிகளின் விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

### 95 சதவீதம்

கர்நாடக தலைநகர் பெங்களூரில் தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் சிவகுமார் கூறியதாவது:

தமிழகத்தின் மாமல்லபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வரும், த.வெ.க., தலைவருமான விஜயை சந்தித்து பேசினேன்.

அப்போது, தமிழகத்தின் நலனுக்காகவும், பெங்களூரின் குடிநீர் ஆதாரத்துக்காகவும் மட்டுமே மேகதாது அணை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவரிடம் தெளிவாக தெரிவித்தேன்.

மேகதாது அணை கர்நாடகாவுக்கானது அல்ல; தமிழகத்துக்கானது தான். மேகதாதுவில் சேமிக்கப்படும் தண்ணீரில் 95 சதவீதம் தமிழகத்துக்கே பயன்படும். அந்த அணை நீரை கர்நாடகா பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது. அணையில் இருந்து 10 டி.எம்.சி., தண்ணீரை மட்டுமே பெங்களூரின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்த முடியும்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதே நேரத்தில், நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை. பேச்சுவார்த்தை மூலமே சரியான தீர்வை எட்ட முடியும்.

### ஒருங்கிணைப்பு குழு

துங்கபத்ரா நதிநீர் விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். இந்த விவகாரத்தில் தீர்வு காண ஒருங்கிணைப்புக் குழு அமைக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இனி வரும் காலங்களில், 1937ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுவோம். கட்சி எந்த முடிவை எடுத்தாலும், அதில் நான் உறுதியாக இருப்பேன்.

இவ்வாறு சிவகுமார் கூறினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்