Paristamil Navigation Paristamil advert login

தமிழ்வழி படிப்போருக்கு அரசு வேலையில் முன்னுரிமை: கவர்னர் ஒப்புதல்

தமிழ்வழி படிப்போருக்கு அரசு வேலையில் முன்னுரிமை: கவர்னர் ஒப்புதல்

27 ஆவணி 2026 வியாழன் 11:18 | பார்வைகள் : 125


தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக, கடந்த ஜனவரி 24ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்று வருபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் அனைத்து காலியிடங்களிலும் 20 சதவீத இடங்களை, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்தது.

### முன்னுரிமை

இதற்காக, 2010ம் ஆண்டு தமிழக சட்டசபையில் 'தமிழ்நாட்டில் தமிழ் வழி கற்றோர் சட்டம் 2010' என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில், ஒருவர் அரசு பணியில் ஏற்கனவே பணியாற்றுகிறாரா என்பதை பொருட்படுத்தாமல், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே அரசு பணியில் இருப்பவர்கள், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை பெற தகுதியற்றவர்கள் என தீர்ப்பளித்தது.

மேலும், அவர்கள் ஏற்கனவே அரசு பணியில் சேர்ந்துவிட்டதால், வேறு அரசு பிரிவு அல்லது துறைக்கு செல்ல அந்த சலுகையை பயன்படுத்த முடியாது என்றும், அவ்வாறு பயன்படுத்தினால் தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்று வருபவர்களின் உரிமை பாதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தவும், 2010 செப்டம்பர் 7ம் தேதிக்கு பிறகு தமிழ் வழியில் கல்வி பயின்று முன்னுரிமை அடிப்படையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் நியமனம் செல்லும் என்பதை உறுதி செய்யவும் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

மேலும், இந்த முன்னுரிமை சலுகையை புதிதாக அரசு பணியில் சேருபவர்களுக்கு மட்டுமே வழங்கும் வகையில், 'தமிழகத்தில் தமிழ்வழி கல்வி கற்றோர் நிலை திருத்தச் சட்டம் 2026' என்ற புதிய சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

### ஒப்புதல்

கடந்த தி.மு.க., ஆட்சியில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ், கடந்த ஜனவரியில் இந்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தார். ஜனவரி 24ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

புதிய சட்டப்பிரிவு 3ன்படி, முன்னுரிமை அடிப்படையில் தமிழக அரசின் ஏதேனும் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவர், பிற முன்னுரிமை காலியிடங்களுக்கு மீண்டும் போட்டியிட உரிமை இல்லை என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து புதிய சட்டம் அமலுக்கு வருகிறது.

இதன் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு தமிழக அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும். இதனால் தமிழ் வழியில் படித்தவர்களும், தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்று வருபவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்