Paristamil Navigation Paristamil advert login

காவல்துறை அதிகாரியின் தலையில் சரமாரி தாக்குதல்; 21 வயது குத்துச்சண்டை வீரருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

காவல்துறை அதிகாரியின் தலையில் சரமாரி தாக்குதல்; 21 வயது குத்துச்சண்டை வீரருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

27 ஆவணி 2026 வியாழன் 13:30 | பார்வைகள் : 970


Ivry-sur-Seine பகுதியில் காவல்துறையினரின் உத்தரவுக்கு இணங்காமல் காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் 21 வயது குத்துச்சண்டை வீரர் ஒருவர், காவல்துறை அதிகாரியை கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் நீதிமன்றத்தால் கண்காணிப்பு நீதிமுறை கட்டுப்பாட்டில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு பரிஸ் நகரின் 18ஆம் வட்டாரத்திலிருந்து Val-de-Marne வரை இடம்பெற்ற துரத்தல் சம்பவத்துக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

வேகமாகச் சென்ற காரை நிறுத்துமாறு காவல்துறையினர் உத்தரவிட்டபோதும், ஓட்டுநர் நிற்காமல் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் Ivry-sur-Seine- பகுதியில் வாகனம் கைவிடப்பட்ட நிலையில், அதில் இருந்தவர்கள் தப்பிச் சென்றனர். அவர்களில் சிலரை காவல்துறையினர் பிடித்தபோது, அவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரி மீது ஒருவர் தலையில் பலமுறை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காயமடைந்த அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நெற்றியில் நான்கு தையல்கள் போடப்பட்டதுடன், ஏழு நாட்கள் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

21 வயதான சந்தேகநபர் கடந்த 25ஆம் திகதி Créteil நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். காவல்துறை உத்தரவை மீறி தப்பிச் சென்றமை, காவல்துறை அதிகாரியை தாக்கியமை மற்றும் அதிகாரியின் சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அவரை விளக்கமறியலில் வைக்குமாறு அரசுத் தரப்பு கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் அவரை கண்காணிப்பு நீதிமுறை கட்டுப்பாட்டில் விடுவித்து, வழக்கை 2026 ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில் அவர் குற்றவாளி என இன்னும் தீர்ப்பளிக்கப்படவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்