Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் பல அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழகத்தில் பல அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

28 ஆவணி 2026 வெள்ளி 06:32 | பார்வைகள் : 124


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் அன்னூர் தாலுகா சர்க்கார் சாமக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் சிக்கியது.

திருநெல்வேலி மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் முகமது கமால் (56) அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.65 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3,000 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

## ரூ.1.92 லட்சம் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத ரூ.1.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டார அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கதவை சாத்திக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம், புதுக்கோட்டை கீரனூர் சார்பதிவாளர் அலுவலகம், ஆரணி நகராட்சி அலுவலகம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

## காரைக்குடியில் விஏஓ கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூர் கிராம நிர்வாக அதிகாரி ராஜகோபால் (52), தலையாரி சாந்தி (57) ஆகியோர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டனர்.

விஏஓ ராஜகோபாலிடம் சக்திவேல் என்பவர், அடங்கலை (விவசாய நிலம், அதன் பயன்பாடு, பயிர் செய்யக்கூடிய பயிர் சாகுபடி உள்ளிட்ட விவரங்களைக் கொண்ட ஆவணம்) சரி செய்வதற்காக அணுகியுள்ளார். இதற்காக ராஜகோபால் மற்றும் சாந்தி ஆகியோர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்திவேல், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனையின்படி அவர் லஞ்சப் பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட ராஜகோபால் மற்றும் சாந்தியை, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தங்கராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

## கணக்கில் வராத ரூ.6.85 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.6.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மதியம், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு மற்றும் எஸ்.ஐ. சக்தி தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.6.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்