Paristamil Navigation Paristamil advert login

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு

28 ஆவணி 2026 வெள்ளி 13:46 | பார்வைகள் : 166


நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் தமிழர்கள் சிக்கிய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொண்டு வரப்பட்டது. அப்போது, தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வலியுறுத்தினார்.

நேபாள வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் சிக்கியுள்ள விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்களை தெரிவிக்க முயன்றார். ஆனால், திமுக, அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் முதலில் பேச அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அனுமதி மறுத்தார். அமைச்சர் பேசிய பிறகே எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு வழங்க முடியும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள், சட்டசபை மரபு மீறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த சபாநாயகர், “கரூர் சம்பவத்தில் முதல்வர் பேசிய பிறகே எதிர்க்கட்சிகளை பேச அனுமதித்தோம். எனவே, எந்த மரபும் மீறப்படவில்லை” என்று கூறினார்.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், “நாங்கள் அரசை குறை கூறவில்லை. அரசின் கவனத்திற்கு விஷயங்களை கொண்டு வருகிறோம். எங்களை பேச அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் எதற்காக சட்டசபைக்கு வர வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், நேபாள வெள்ளத்தில் தமிழர்கள் சிக்கிய விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொண்டு வரப்பட்டது.

உதயநிதி கேள்வி

அதன்பிறகு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது:

“நேபாளத்திற்கு சென்றுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியாததால், இங்குள்ள அவர்களது குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்திலும் அச்சத்திலும் உள்ளனர்.

இந்த சம்பவத்தில் எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? எத்தனை பேரை மீட்டுள்ளோம்? அரசு அறிவித்த உதவி எண்ணிற்கு எத்தனை பேர் தொடர்பு கொண்டுள்ளனர்? அந்த அழைப்புகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சிறப்பு அதிகாரி யாராவது நியமிக்கப்பட்டுள்ளாரா?

ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சிவஞானம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக சார்பில் மத்திய அமைச்சருக்கு விரிவான கடிதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

103 தமிழர்களை மீட்க நடவடிக்கை

இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

“நேபாளத்திற்கு கைலாஷ் யாத்திரை சென்ற 103 தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 384 பயணிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 291 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்; 93 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை 209 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

35 வாகனங்கள் செல்லக்கூடிய பாலங்களும், 45 தொங்கும் பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. குடிவரவு அலுவலர்களை தொடர்பு கொள்வதே பெரும் சவாலாக உள்ளது. மீட்புப் பணிகளும், மருத்துவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா நிறுவனம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 54 பேரும், புதுச்சேரியில் இருந்து 3 பேரும் நேபாளம் சென்றுள்ளனர். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்வர் விஜய் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது” என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்