Paristamil Navigation Paristamil advert login

இடர்பாடுகளை நீக்கினால் ரூ.2 லட்சம் கோடி திட்டங்களுக்கு அனுமதி: அமைச்சர் ஆதவ்

இடர்பாடுகளை நீக்கினால் ரூ.2 லட்சம் கோடி திட்டங்களுக்கு அனுமதி: அமைச்சர் ஆதவ்

28 ஆவணி 2026 வெள்ளி 14:59 | பார்வைகள் : 186


முந்தைய ஆட்சியில் உள்ள இடர்பாடுகளை நீக்கினால், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் ஆதவ் தெரிவித்துள்ளார்.

காட்பாடியில் மேம்பாலம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் ஆதவ் கூறியதாவது:

காட்பாடி ரயில் நிலையம் அருகே உயர்மட்டப் பாலம் அமைப்பதற்காக, மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், விழுப்புரம் - மங்களூரு சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

தற்போது ரூ.1,042 கோடி மதிப்பிலான நில எடுப்பு பணிகள் உள்ளிட்ட இந்தத் திட்டத்திற்கான ஒப்புதல் மத்திய அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைப் பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு மற்றும் தமிழகத்திற்கு தேவையான இதர சாலைத் திட்டங்கள் குறித்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை கடந்த ஜூன் 2-ம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கினால், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், முந்தைய ஆட்சியில் உள்ள இடர்பாடுகளை நீக்கினால், வரும் காலங்களில் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு 5 ஆண்டுகளில் அனுமதி வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

அதுமட்டுமின்றி, மத்திய சாலை நிதியில் இருந்து தமிழகத்திற்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ரூ.500 கோடி நிதியை முதல்முறையாக ரூ.1,000 கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளார். தமிழகத்திற்கு வழங்கப்படும் சாலை பாதுகாப்பு நிதியையும் ரூ.300 கோடியில் இருந்து ரூ.600 கோடியாக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்