Paristamil Navigation Paristamil advert login

கொலம்பியாவில் பிரெஞ்சு இராணுவ வீரர் கடத்தல்!!

கொலம்பியாவில் பிரெஞ்சு இராணுவ வீரர் கடத்தல்!!

28 ஆவணி 2026 வெள்ளி 07:59 | பார்வைகள் : 272


பிரெஞ்சு இராணுவத்தின் Légion étrangère எனப்படும் வெளிநாட்டுப் படைப் பிரிவில் பணியாற்றும் பிரான்ஸ்–கொலம்பியா இரட்டைக் குடியுரிமை கொண்ட வீரர் ஒருவர் கொலம்பியாவில் கடத்தப்பட்டுள்ளார். José Olger Melo Charry என்ற அந்த வீரர், கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள Nariño மாகாணத்தில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஆயுதக் குழுவினரால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டதாக இராணுவ அறிக்கையை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தனது சொந்த நாடான கொலம்பியாவில் விடுமுறையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளாக பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றி வரும் José Olger Melo Charry, caporal பதவியில் உள்ளவர் என கொலம்பிய இராணுவம் தெரிவித்துள்ளது. அவர் பிரெஞ்சு வெளிநாட்டுப் படையில் பணியாற்றுவதை கடத்தல்காரர்கள் அறிந்த பின்னரே அவரை கடத்தியதாக இராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலின் பின்னணியில், 2016ஆம் ஆண்டு கொலம்பிய அரசுடன் ஏற்பட்ட சமாதான உடன்பாட்டை ஏற்க மறுத்த முன்னாள் கொரில்லா அமைப்பின் கிளர்ச்சியாளர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. 

கொலம்பியாவில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் பெருமளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், பணம் பறிப்பதற்கும் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்கும் கடத்தல்களை மேற்கொண்டு வருகின்றன. ஆகஸ்ட் தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்த வலதுசாரி அதிபர் Abelardo de la Espriella, கொரில்லா குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்; இதற்கு அமெரிக்காவின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் இடதுசாரி அதிபர் Gustavo Petro மேற்கொண்ட பல சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அவரது ஆட்சிக் காலத்தில் ஆயுதக் குழுக்கள் மேலும் வலுப்பெற்றதாக பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்