Paristamil Navigation Paristamil advert login

மாநில அந்தஸ்துக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார்: புதுச்சேரி முதல்வர்

மாநில அந்தஸ்துக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார்: புதுச்சேரி முதல்வர்

29 ஆவணி 2026 சனி 05:14 | பார்வைகள் : 117


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, முதல்வர் பதவியையே ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதத்தின்போது ஜான்குமார் எம்எல்ஏ பேசுகையில், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து சுலபமாக கிடைத்துவிடும். ஆனால், சிறப்பு மாநில அந்தஸ்தை பெற வேண்டும்” என்றார்.

இதற்கு தவெக எம்எல்ஏ ராமு, “நீங்கள் அங்கம் வகிக்கும் பாஜகதான் மத்தியில் ஆட்சி செய்கிறது. நீங்கள் அங்கு கேட்கலாமே” என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சபையை ஒத்திவைக்க வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு சபாநாயகர், “சபையை ஏன் ஒத்திவைக்க வேண்டும்? மக்கள் மீது அக்கறை இருந்தால், அவர்களின் நலனுக்காக உங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜான்குமார், “எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றார். தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், திமுக எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் எம்எல்ஏ கார்த்திகேயனும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

“மாநில அந்தஸ்துக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார்”

இதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில்:

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். மாநில அந்தஸ்து கேட்டு டில்லிக்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன்.

மாநில அந்தஸ்துக்காக எனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளேன். பிரதமரிடம் கூட புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் இருப்பது குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம்” என்றார்.

இதைத்தொடர்ந்து, மேலும் பல எம்எல்ஏக்களும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்