Paristamil Navigation Paristamil advert login

ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை அறிவித்த கனடா!

ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை அறிவித்த  கனடா!

29 ஆவணி 2026 சனி 11:14 | பார்வைகள் : 133


ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத்தடையை கனடா மேலும் நீடித்துள்ளது.

எபோலா நோய்த்தொற்று பரவல் காரணமாகக் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் கனடாவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதாகக் கனடா அரசு அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் அமலில் உள்ள இந்தத் தடையால் 67,000-க்கும் அதிகமான மக்களின் விசா விண்ணப்பங்கள் மற்றும் குடியிருப்பு உரிமைகள் முடங்கியுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 31,693 நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பங்களும், 10,465 தற்காலிகக் குடியிருப்பு விண்ணப்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கனடாவிற்கு வெளியே உள்ள 1,534 நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மற்றும் 23,415 தற்காலிக விசா வைத்திருப்பவர்களும் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நாடுகளிலிருந்து திரும்பும் கனடியர்களுக்கு 21 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நிவாரண அமைப்புகளின் மனிதாபிமானப் பணிகளைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

கெங்கோவில் 5,794 பேர் பாதிக்கப்பட்டு, 2,786 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத 'புண்டிபுக்யோ' என்ற அரிய வகை வைரஸால் இங்குப் பாதிப்பு மிகவேகமாகப் பரவி வருகிறது.

உகாண்டாவில் எபோலா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாகப் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளன. தெற்கு சூடானில் எந்தப் பாதிப்பும் பதிவாகவில்லை.

கனடாவில் எபோலா பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும், நோயின் வீரியம் மற்றும் சிகிச்சை முறைகள் இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாகவே இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கனடா பொது சுகாதார முகமை தெரிவிக்கிறது.

முழுமையான பயணத் தடை விதிப்பது அறிவியல் பூர்வமானதல்ல என்றும், பயத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் உலக சுகாதார நிறுவனம் கண்டித்துள்ளது.

கனடிய குடிமக்களுக்குத் தனிமைப்படுத்தல் அனுமதியும், வெளிநாட்டினருக்கு முழுத் தடையும் விதிப்பது நியாயமற்றது என சர்வதேச சுகாதார சட்ட ஆய்வாளர் ரூஜின் ஹபீபி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் தடை உண்மையான சுகாதாரப் பாதுகாப்பைக் காட்டிலும், மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காகச் செய்யப்பட்ட ஒரு வெளிப்புற நடவடிக்கை மட்டுமே என்று மெக்கில் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோன் லியூ விமர்சித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கப் நிகழ்வுகளில் பங்கேற்கவிருந்த கலைக்குழுவினர் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழும் கனடியர்கள் பலரும் இந்த முடிவால் பெரும் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்