Paristamil Navigation Paristamil advert login

டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை குறித்து நெதர்லாந்து எச்சரிக்கை

டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை குறித்து நெதர்லாந்து  எச்சரிக்கை

30 ஆவணி 2026 ஞாயிறு 08:09 | பார்வைகள் : 134


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக வடிவிலான, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய எக்ஸ்டசி (Ecstasy) போதை மாத்திரைகள் குறித்து நெதர்லாந்தைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு மற்றும் மனநல நிறுவனமான 'டிரிம்போஸ் இன்ஸ்டிடியூட்' இந்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நெதர்லாந்தில் உள்ள போதைப்பொருள் பரிசோதனை மையங்களில் ஆகஸ்ட் மாதத்தில் ஒப்படைக்கப்பட்ட சில மாத்திரைகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் 'பி.எம்.எம்.ஏ' (PMMA - para-methoxymethamfetamine) என்ற அபாயகரமான வேதிப்பொருள் மிக அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாத்திரைகளின் ஒரு புறத்தில் டொனால்ட் ட்ரம்பின் முக அமைப்பும், மறுபுறத்தில் "Trump" மற்றும் "NL" என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

"எந்தச் சூழ்நிலையிலும் இந்த மாத்திரையைப் பயன்படுத்த வேண்டாம்" என எச்சரித்துள்ள 'டிரிம்போஸ் இன்ஸ்டிடியூட்' நிறுவனம், இது உடலின் வெப்பநிலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறியுள்ளது.

இந்த மாத்திரையை உட்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு குமட்டல், வேகமான இதயத் துடிப்பு மற்றும் வலிப்பு போன்ற தீவிர பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் எக்ஸ்டசி மாத்திரைகளை தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றாலும், அங்குள்ள கழகங்கள் மற்றும் இசை விழாக்களில் இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த நாட்டின் அரசு அறிக்கையின்படி, 2022 இல் மட்டும் சுமார் 5,50,000 பேர் இந்த போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

முன்னதாக 2017 ஆம் ஆண்டும், ஜெர்மனி காவல்துறையினர் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 5,000 எக்ஸ்டசி மாத்திரைகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்