Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது

பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது

31 ஆவணி 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 114


உஸ்பெகிஸ்தானின் மிக உயரிய விருதான 'ஒலிய தராஜலி தோ'ஸ்த்லிக்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தாஷ்கன்ட் நகரில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கெட் மிர்ஸியோயேவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விருது

பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ்தான் பயணத்தின்போது, அந்நாட்டின் உயரிய விருதான 'ஒலிய தராஜலி தோ'ஸ்த்லிக்' விருது அவருக்கு வழங்கப்பட்டது. உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கெட் மிர்ஸியோயேவ் இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

<b>விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது:</b>

இந்த விருது, இந்தியாவின் பல நூற்றாண்டு கால பாரம்பரியத்துக்கும், இரு நாடுகளின் மக்களிடையே நீண்ட காலமாக தொடரும் நட்புறவுக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். இந்த பயணத்தின்போது தனக்கும், தனது குழுவினருக்கும் சிறப்பான வரவேற்பை அளித்த உஸ்பெகிஸ்தான் அதிபருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

அணுசக்தி ஒப்பந்தம்

தாஷ்கன்ட் நகரில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கெட் மிர்ஸியோயேவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் மோடி கூறுகையில்,

இந்தியாவுக்கு நீண்ட காலத்திற்கு யுரேனியம் வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், அவரது உஸ்பெகிஸ்தான் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகம் அதிகரிப்பு

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கெட் மிர்ஸியோயேவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையிலான உறவை விரிவான மூலோபாய கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்துவது.

* 2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தகத்தை 5 பில்லியன் டாலர் (47,712 கோடி ரூபாய்) அளவுக்கு அதிகரிப்பது.

* செயற்கை நுண்ணறிவு (ஏஐ), முக்கிய தாதுக்கள், எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது.

* சந்தை அணுகல், வங்கி சேவைகள் மற்றும் பணப்பரிமாற்ற வசதிகளை மேம்படுத்துவது என பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,

* விவசாயம் மற்றும் சுகாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது.

* பாரம்பரிய மருந்துகள் தொடர்பான பணிகளை விரிவுபடுத்துவது.

* கல்வி மற்றும் கலாசார பரிமாற்றங்களை ஊக்குவிப்பது.

* உஸ்பெகிஸ்தானில் உள்ள புத்த பாரம்பரிய தளங்களை பாதுகாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது.

ஆகிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சந்திப்பு

உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, தாஷ்கன்ட் நகரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, உஸ்பெகிஸ்தானில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்